Wednesday 4 March 2015

28.11.2014
ஆண்டுவிழா...
ஆண்டுவிழா ஒத்திகையில் ஹிந்திப்பாடல் குழுவிலேயே இறுதியில் இரண்டு நிமிடங்கள் கட்டைக்கால் ஆட்டமும் இருந்தது.
கிராமிய நடனங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் நான் மட்டுமே ஆர்வம்காட்டிவருகிறேன். கடந்தஆண்டு கலை பண்பாட்டுத்துறை மூலம் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தேன்.அதில் கட்டைக்கால் நடனம் சிலகாலம் பயின்றனர் நான்கு மாணவர்கள்.
காலில் கட்டை கட்டி நடக்க மட்டுமே பழகியிருந்தனர்.
தொடக்கத்திலேயே என்னிடம் வந்து கேட்டனர்,
சார், கட்டைக்கால் ஆடணும்,கட்டைகள் வேணும்.
என்ன பாட்டு? ஆடத்தெரியுமா?
மிஸ் கூப்பிட்டாங்க. மியுசிக் போட்டுஆடப்போறோம்.
சரி வாங்கித்தர்றேன்.
கலைநிகழ்ச்சிகளின் முழுப்பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
சார், அந்த அம்மையார் கட்டைக்கால் ஆட்டத்தையும் சேர்த்திருக்காங்களாம்.
கட்டைக்கால் வேணும்னா வாடகைக்குத்தான் எடுக்கணும்.
சரி,கொண்டுவரச்சொல்லுங்க.
நானும் சொன்னேன்.
மறுநாள் இரண்டு ஜோடி கட்டைகள் வந்தன.
மாணவர்களிடம் கொடுத்தோம்.
மீதி இரண்டு ஆண்டு விழாவிற்கு முதல்நாள் வரும் என்றோம்.
ஆறாம் வகுப்பில் திருவிழா என்றொரு பாடம்.
மாணவர்களுக்கு ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்களில் சில கூறுகளை கற்றுக்கொடுத்தேன்.
ஒரு மாணவனுக்கு சுலபமாக கரகச்செம்பு தலையில் நின்றது.
கட்டைக்கால் ஆடும் மாணவனை அழைத்து,
இவனுக்கு கரகம் நன்றாக வருகிறது, இவனையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். என்றேன்.
இரு நாட்கள் கழித்துக்கேட்டேன்.
கரகம் எப்படி ஆடுகிறான்?
அவன் சரியா ஆடலைன்னு மிஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
ஒத்திகை.
ஹிந்திப்பாடல்.
இருவர் முன்னாள் ஆட, பத்துபேர் பின்னால்.
தொடர்ந்து ஒரு தமிழ்பாடல்.
இருவர் மட்டுமே ஆட, பின்னால் மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அடுத்து செண்டை மேள இசை.
கட்டைகள் கட்டி நான்கு மாணவர்களும் அங்கும் இங்கும் நடந்தனர்.
மற்றவர்கள் சுற்றி நின்று கைகளைத்தட்டிக்கொண்டே இருந்தனர்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மறுநாள் கட்டைக்காலுக்கு வாடகை பேச கிராமியக்கலைஞர் வந்திருந்தார்.
நானும் மாணவர்களை அழைத்து உங்கள் ஆசிரியையிடம் கூட்டிச்செல்லுங்கள்.அவர்களே பேசட்டும். என்று அனுப்பிவைத்தேன்.
சில நிமிடங்களில் அனைவரும் திரும்பி வந்தனர்.
மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன.
மூத்த கிராமியக்கலைஞர் மோகன் சொன்னார்,
அந்த அம்மாவுக்கு வாடகை பற்றி எதுவும் தெரியாதாம்.
சும்மான்னு நெனைச்சாங்கலாம்!
வாடகைன்னா, வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
பசங்களுக்கும் செம திட்டு.
மாணவர்களைப்பார்த்தேன்.
ஏண்டா, நீங்க சொல்லலியா?
கண்களில் நீர்.
என்ன செய்வது?
சரி.மோகன், வாடகையை அப்புறம் வாங்கிக்கங்க.
டேய்,நீங்க கட்டையை கால்ல கட்டுங்க.
ஒருசில ஸ்டெப் சொல்லித்தர்றேன்.
அழகர் ஆட்டத்துல நீங்களும் ஆடுறீங்க.
அழகர் வரும்போது காலில் கட்டை கட்டி உயரமாக ஒய்யாரமாக ஆடியபடி அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
நான்கு மாணவர்களில் மூன்றுபேர் மட்டுமே ஆடினார்கள். ஒருவனைக்காணவில்லை.

No comments:

Post a Comment