Wednesday 4 March 2015

21.11.2014
அஞ்சு பைசா என்பது அவன் பட்டப்பெயர்.
பட்டப்பெயர்கள் இப்போது அரிதாகிவிட்டன.
குறைபாடுகளை சொல்லிக்கேலி செய்யும் போக்குகள் தென்படுகின்றன.
இதுபோல் ஆச்சரியமான பெயர்கள் அபூர்வம்.
9 ஆம் வகுப்பில் படிக்கிறான் அஞ்சுபைசா.
தமிழ் எழுத்துக்களே தெரியாது.
பள்ளி தொடங்கியதிலிருந்து என்னென்னவோ செய்துபார்த்துவிட்டேன்.
பகத்சிங் சொல்லித்தருவான் என்று நம்பினேன்.அவனும் விட்டுவிட்டான்.ஓரளவு முன்னேற்றம் என்றாலும் வாசிக்க இயலவில்லை.
பார்த்து எழுதுவான்.
கையெழுத்துப்பயிற்சி நல்லது என்று சொன்னபோது எல்லோரையும்போல அவனும் நாளுக்கு ஒருபக்கம் என்று புத்தகத்தில் இருக்கும் மனப்பாடப்பாடல்களை எழுதத்தொடங்கினான். ஓரிரு நாட்களில் நாளுக்கு பத்து இருபது என்று புத்தகத்தின் முன்னட்டை முதல் பின்னட்டை வரை எழுதுவான். பக்கத்திற்கு ஒரு தேதி என்று எதிர்காலத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.
ஒருபக்கம் எழுது,நிறுத்தி எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
சொந்தமாக எழுதத்தெரியாது.
சிரித்த முகத்துடன் இருப்பான்.
தமிழ் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே எனது அறைக்கு அழைக்க வந்துவிடுவான்.
வகுப்பில் நான் ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தால் சிறிது கவனிப்பான். பிறகு,விளையாடத்தொடங்கிவிடுவான்.
வேறு யாரேனும் பேசினால் எழுந்துசென்று அடிப்பான்.
அடி வாங்குவான்.
அவனது சேட்டைகள் சிலசமயங்களில் எல்லை மீறும்போது முன்னால் அழைத்து உட்காரச்சொல்வேன்.
என்னசொன்னாலும் வாசிப்பில் ஆர்வம் காட்டவே இல்லை.
பயிற்சி ஆசிரியை சொன்னால் கேட்பான் என்று எண்ணினேன்,சிறிது முயன்றான். எனினும் சேட்டைகள் தொடர்ந்தன.
நேற்று அவன் சேட்டை எல்லை மீறியது. என்ன சொல்லியும் கேட்கவில்லை. முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டேன்.
இனி நீ திருந்த மாட்டாய்,உனக்கு எவ்வளவோ செல்லம் கொடுத்துவிட்டேன்.நீ படிப்பதில்,வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.வா, உனக்கு T.C வாங்கித்தந்துவிடுகிறேன். என்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகமும் இருண்டது.
எனக்குப்பாவமாக தோன்றியது.இருந்தாலும் முகத்தை கடுமையாகவே வைத்துக்கொண்டேன்.
அவன் அழுவதுபோல் ஆகிவிட்டான்.
பக்கத்தில் இருந்தவனிடம்,
இவனை என் அறைக்குமுன்பாக உட்கார வை. வீட்டுக்கு ஒரேடியாக அனுப்பிவிடுகிறேன்.திருந்தவே மாட்டான்.
என்றுசொல்லியனுப்பிவிட்டேன்.
அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

வகுப்பு முடிந்த பின் அறைப்பக்கம் செல்லவே இல்லை.
சில பாடவேளைகள் கழிந்தபின் மைதானத்தில் வந்துகொண்டிருந்தபோது,
அஞ்சு பைசா எதிரே வந்தான்.
என்ன?
சாரி,சார்.
கண்களில் நீர்.
தப்புதானே!.
ம்.
வாசிக்கத்தெரியாம இருக்கறது எனக்கு அசிங்கமில்லையா?
ம்.
என் அறையிலேயே இரு. வாசிச்து பழகிட்டு வகுப்புக்கு போகலாம்.
சிரித்தான்.சிரித்தேன்.

No comments:

Post a Comment