Wednesday 4 March 2015

18.11.2014
பசும்பொன் முத்துராமலிங்கர் பற்றிய செய்திகள் 6 ஆம் வகுப்பில் இன்றும்.
பிறந்த தேதி அடிப்படையில் அண்ணன், தம்பி யார் என்பதை முடிவுசெய்துகொண்டோம்.
ஆலய நுழைவு போராட்டம், குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய இரண்டையும் கதையாகச்சொன்னேன்.
மதுரை மீனாட்சி ஆலயத்திற்குள் எல்லோரும் போகமுடியாத காலம் இருந்தது என்பதே மாணவர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்தது.
வைத்தியநாதர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோவிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்த இனத்தவர்களை உடன் அழைத்துக்கொண்டு சென்றதை எடுத்துக்கூறினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கரின் உதவி இதற்கு முக்கிய பங்காகும்.
வைத்தியநாதரின் வீடு நம் பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ளது.தற்போது அங்கு ஒரு உணவுவிடுதி இயங்கிவருகிறது.
என்றும் கூறினேன்.
குற்றப்பரம்பரைச்சட்டம் மூலம் இந்தியா முழுதும் பல்வேறு இனத்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
முத்துராமலிங்கர் இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவென்றார்.

ஒரு மாணவன் கேட்டான்,
நீங்க சொன்னதெல்லாம் கதையா? நிஜமா?
இப்போ கேட்ட கதையெல்லாம் முன்னாடி நடந்த உண்மை.என்றேன்.
சிறு இடைவேளை மணியடித்தது.
மாணவர்களில் சிலர் வெளியே இருந்த கூடத்தில் வட்டமாக நின்று,
சாட்...பூட்...திரி.....
என்ன விளையாட்டு?
இரும்பு தொட்டு.
அப்படின்னா?
அவுட் ஆனவன் சொல்லும் இரும்புக்கம்பியை எல்லோரும் போயி பிடிச்சுக்கணும்.அதுக்கு முன்னாடி அவன் தொட்டுட்டா நாம அவுட்டு. தொட விரட்டும்போது வேற கம்பிய பிடிச்சுக்கிட்டா அவுட் இல்ல. ஆனா,அவன் சொன்ன கம்பிக்கு எப்படியும் வந்துரணும்.
நிறைய கம்பிகளால் ஆன கூடம் அது.( தோற்பாவைக்கூத்து நடைபெற்ற இடம்).
சார்,விளையாட வர்றீங்களா?
பத்து நிமிடங்கள் போனதே தெரியாமல் விளையாட்டு.
இருமுறைகள் அவுட் ஆனேன்.

No comments:

Post a Comment