Wednesday 4 March 2015

17.11.2014
ஆறாம் வகுப்பில் 'தேசியம் காத்த செம்மல்' பாடம்.
பசும்பொன் முத்துராமலிங்கர் குறித்த பாடம்.
வழக்கம்போல மாணவர்களிடையே கதைபோல சொல்லத்தொடங்கினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கர் குறித்த சுவையான செய்திகளை சொல்லப்போகிறேன். என்று தொடங்கினேன்.
முத்துராமலிங்கத்தேவர்- என்றான் ஒரு மாணவன்.
உண்மைதான், புத்தகத்திற்குள் சாதி இல்லை.
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த பெரும்பாலான தலைவர்களிடையே சாதி இல்லை. ஒன்றாகச்சேர்ந்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்டனர். இப்போதுதான் நாம் அவர்களை அவரவர் சாதிக்கு தலைவர்கள் என்று ஆக்கிவிட்டோம். என்றேன்.

சிறுவர்களுக்கு புரியும்படியாக சுதந்திரப்போராட்ட வரலாற்றின் இரு பிரிவுகளை சிறிது விவாதிக்கலாம்,என கரும்பலகையில்
மிதவாதி
தீவிரவாதி
என்று எழுதினேன்.
தீவிரவாதி என்றால் என்ன அர்த்தம்?- கேட்டேன்.
கொள்ளைக்காரன்.
குண்டு வைப்பவன்
கடத்தல்காரன்....இப்படி ஆளுக்கொன்றாக கத்தினர்,
எழுதிக்கொண்டே வந்தேன்.
இறுதியாக ஒருவன் சொன்னான்,
பாகிஸ்தான்காரன்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தம்பிகளே,
எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். பொத்தாம்பொதுவாக ஒரு நாட்டில் உள்ள அனைவரையும் குறைசொல்லக்கூடாது.
இவ்வளவு அர்த்தம் சொன்னீர்களே,இந்த வார்த்தைக்கு நம் நாட்டு சுதந்திரத்திற்கு முன் மரியாதையான அர்த்தம் இருந்தது.
ஒரு மாணவன் திடீரென,
தீவிரமாக செயல்படுபவர்கள்......என்று கத்தினான்.
சரிதான், என்றேன்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்ணன் தம்பிகள். அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் சுதந்திரத்திற்கு முன்புவரை ஒன்றாக இருந்தவர்கள்.என்றேன்.
யார் அண்ணன்? யார் தம்பி? என்று ஒரு மாணவன் கேட்க,
இந்தியா அண்ணன் என்று பலரும் கத்தினர்.
சிறு வகுப்புகளில் எப்போதுமே பாடம் என்று உரையாடலைத்தொடக்கினால் எங்காவது சுற்றுகிறதே! என்று எண்ணினேன்.
இருந்தாலும் பல்வேறு செய்திகளை விவாதிக்கலாம் என்பதால் இது எப்போதும் எனக்கு உவப்பாகவே இருக்கும்.
வகுப்பு நேரம் முடிந்துவிட்டது.
அனைவரும் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்,
அண்ணன்யார்?, தம்பி யார்? என்பதை நாளை முடிவுசெய்துகொள்வோம். என்று சொல்லிவந்தேன்.

No comments:

Post a Comment