Wednesday 4 March 2015

14.11.2014
இரண்டு நாட்களாக மடிக்கணினி தொல்லை தந்துகொண்டிருந்தது.
இப்போதுதான் சரியானது.
முன்தினம் தேர்வறை கண்காணிப்பு பணி. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் அவ்வப்போது பார்த்து எழுதிக்கொண்டிருந்தனர்.
முன் இருந்தவனின் தாளைப்பார்த்து பின்னால் இருந்தவன் எழுதினான்.அதற்கு வசதியாக தாளை அவனும் வைத்திருந்தான். சிலமுறைகள் எச்சரித்தேன். பலனில்லை.
இரு பாடவேளைகள் மட்டுமே தேர்வு.
ஒரு பாடவேளை முடிந்திருந்தது.நான் சொல்வதை இருவரும் பொருட்படுத்தவே இல்லை. மூன்றாம் மாணவனும் பார்த்து எழுதத்தொடங்கினான்.
எனது கோபம் அதிகமானது.
விடைத்தாளைக்காட்டிய மாணவனிடமிருந்து விடைத்தாளை எடுத்து
பின்னால் கொடுத்தேன்.
நன்றாக பார்த்து எழுதிக்கொள். எட்டிப்பார்த்தால் சரியாகத்தெரியாது.
இடையில் வரும் தேர்வுகள் உனது படிப்பறிவை பரிசோதிக்க மட்டுமே தவிர இதில் அதிக மதிப்பெண் வாங்கினால் பயன் ஏதுமில்லை. மற்றவர்களை ஏமாற்றலாம் என நினைக்காதே,நீதான் ஏமாந்து போவாய்,
சொல்லியபடியே அந்த விடைத்தாளை கிழித்துவிட்டேன்.
பார்த்து எழுதுவதை விட காட்டுவது தவறு.
தாளுக்குரியவன் அழுதுவிட்டான்.
அறையில் இருந்த அனைவரும் திகைத்துவிட்டனர்.
எனக்கு அதிர்ச்சி.
இப்படியான செயலை ஒருபோதும் நான் செய்ததே இல்லை.
திட்டுவேன்.பேசுவேன். எப்படி ஒரு விடைத்தாளை கிழித்தேன்?
அறியாமல் இப்படியொரு செயலை செய்துவிட்டோமே என மனம் பதறியது.
அழாதே, நீ செய்தது தப்புதானே என்றேன்.
ஆமென தலையசைத்தான்.
சரி, மீண்டும் எழுது.
நேரமில்லை.
நான் சொல்லிக்கொள்கிறேன்.
வேறு மாணவனிடம் தாள்கள் வாங்கிக்கொடுத்தேன்.
தேர்வு முடிந்தபின் அதே அறையில் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு.
அறைக்கு வந்த ஆசிரிய நண்பரிடம் இவன் ஒரு பாடவேளை எழுதட்டும் இவனது நேரத்தை நான் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லி இருக்கவைத்தேன்.
அவனது ஆசிரியரிடமும் நடந்ததைக்கூறி விடத்தாளைப்பெற்றுக்கொள்ளுமாறு சொன்னேன்.
நல்லபாடம்.

No comments:

Post a Comment