Friday 31 October 2014

கதகேளு...கதகேளு!


சிறுவர்களுக்கான கதைகள் எங்கே போயின?
வீட்டுச்சூழல் மாறி ஆண்டுகளாகிவிட்டன.
பள்ளிச்சூழல் மதிப்பெண் சுழலில் சிக்கித்தவித்தாலும் முப்பருவக்கல்வி குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
காலம்காலமாக நம்மிடையே உலவிவரும் பல்வேறு கதைகளை மாணவரிடையே கொண்டு சேர்க்கவேண்டுமென முடிவுசெய்தோம்.
சென்ற கல்வியாண்டில் மதிய உணவு இடைவேளையில் தமிழாசிரியர் முத்துக்குமாரும் நானும் கதைகளைச்சொல்லத்தொடங்கினோம்.
இந்த ஆண்டு 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா மூவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்த முடிவு செய்தோம்.
வாசித்தலை மேம்படுத்தலே முதல் பணி என முடிவு செய்து, முதல் கட்டமாக எழுத்துக்களை விளையாட்டாக அறிமுகம் செய்யும் ' வாசி..நேசி...சுவாசி!' என்ற நிகழ்வினை நடத்தினோம்.

தொடர்ந்து வாசிப்பையும் கற்பனை,சிந்தனை மற்றும்பல திறன்களையும் வளர்க்கும்பொருட்டு 'கதகேளு...கதகேளு!' என்ற நிகழ்வை யோசித்தோம்.
கதையும் நாடகமும் கலந்து எளிய ஒப்பனையுடன் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணினோம்.
மாணவர்கள் சுலபமாக நடித்துவிடுவார்கள். ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து நடித்தால் என்ன?
ஆசிரியர் மாணவரிடையே இடைவெளி குறையுமே!
செயல்படுத்தினோம்.
பஞ்சதந்திரக்கதைகளில் இருகதைகள்.
ஒருவாரத்தில் ஆசிரியர் முத்துக்குமாரின் இயக்கத்தில் வடிவம் பெற்றது.
ஒப்பனை- முதுகலை உயிரியல் ஆசிரியர் ரமணன் மற்றும் சில மாணவர்கள்.
எங்கள் மதுரைக்கல்லூரி வாரியத்தைச்சார்ந்த தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரையும் அழைத்திருந்தோம்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் பஞ்சதந்திரக்கதைகள் குழந்தைகள் மத்தியில்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அனைவரும் பல்வேறு மிருகங்களுடன் காட்டிற்குள் மகிழ்ச்சியாக உலவி வந்தோம்.
நிகழ்வின் நிறைவில் மகிழ்ந்த பள்ளிச்செயலர் திரு.எஸ்.பார்த்தசாரதி, நடித்த அனைத்து மாணவர்களுக்கும் சட்டைத்துணி போர்த்திக்கௌரவித்தார்.

மதுரை மாவட்டப்பள்ளிகளுக்கெல்லாம் சென்று இந்நிகழ்வை நடத்துங்கள் என்றும் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார்.

No comments:

Post a Comment