Friday 4 July 2014

மலர்ந்த நினைவுகள்.


மாணவர் தங்கப்பாண்டியின் மாணவர்களின் கிராமியக்கலைகள் அரங்கேற்ற விழா. ஊர்வலமாக கிராமியக்கலைகளை நிகழ்த்தியபடி சிறார்கள் கொண்டாட்டமாய் பவனிவர, இடையே தனி நாதஸ்வரம், தவிலுடன் ஆடிக்கொண்டே வந்தார் ஒரு ராஜா. அவரைச்சில படங்கள் எடுக்கலாம் என நெருங்கினேன். என்னை உற்றுப்பார்த்தவர், ஓடிவந்து நாடியைப்பிடித்து,
ராசா,நல்லாருக்கியா? பாத்து ரொம்ப நாளாச்சு!
என்ன ஆச்சரியம்,மறதியின் கொடும் அடுக்குகளிலிருந்து எப்படி மீண்டது அந்தப்பெயர்?!
தாளமுத்து.
கூவினேன்,
தாளமுத்து.....எப்படி இருக்கீங்க? நல்லாஇருக்கீங்களா? எங்க இருக்கீங்க?
ஆச்சரியமும் அன்பும் நினைவுகளும் மனதுள் நிறைந்தன.

19 ஆண்டுகளுக்கு முந்தைய குடியரசு தினம். தலைநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களுள் ஒன்று 'அகில இந்திய கிராமியக்கலை விழா'.
பல மாநிலங்களின் சார்பாக வந்திருந்த கலைக்குழுக்களுடன் தமிழகத்தின் சார்பாக மயிலாட்டம் ஆட பெருங்குழுவாக நாங்களும். ஒரு மாதகால ஒத்திகை.
ஒவ்வொருநாளும் அவரவர் பயிற்சி முடிந்ததும் பல்வேறு மாநிலக்கலைஞர்களும் கூடி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மகிழ்ந்திருப்போம்.
கடுங்குளிரின் பொருளை அங்குதான் உணர்ந்தேன்.
நடனக்களைப்பு அதையும் மிஞ்சும்.
நடனங்களில் துள்ளலானது பஞ்சாபியர்களின் பாங்க்ரா.நமது ஒயிலாட்டம் போல. இசையில் நமது தவில் நாதஸ்வரம்தான்.

ஆடுவதற்காக வந்திருந்தாலும் தாளமுத்து அடிப்படையில் கிராமிய இசைக்கலைஞர்.மிகச்சிறந்த கிராமியப்பாடகர். வெள்ளந்தியான மனிதர்.எப்போதும் எங்களின் கொண்டாட்டங்கள் அவரின் பாடல்களால் துள்ளலாகும்.
யார் எப்போது கேட்டாலும் மறுக்காமல் பாடுவார். அக்காலத்தில் ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமில்லாததால் வானொலியோடு அவர் புகழ் வளர்ந்தது.

வயசு 75 ஆச்சு.முன்னமாதிரி ஆடப்பாட முடியல.
இருந்தாலும் தங்கப்பாண்டி கூப்டான்,மரியாதை செய்யணும்னு,
வந்துட்டேன். சும்மா எப்படி இருக்க,அதான் ஆட்டமும்.
நல்லாஇருக்கீங்களா ?
எனக்கென்ன,ரெம்பக்கஷ்டமில்ல.ஓடுது.
காசுபணமில்லாட்டியும் சந்தோஷமா இருக்கேன்.
காசா வேணும்? ஏதோ, இருக்கிறவர நடமாடணும், நிகழ்ச்சின்னு போனா நாலு ஊரப்பாத்து நாம ரசிக்கணும்,நம்மளப்பாத்து மக்கள் ரசிக்கணும் அவ்வளவுதான்.

அவ்வளவுதான்.

No comments:

Post a Comment