Saturday 19 July 2014

மனம் நிறைந்த மாணவன்-3


அந்த ஆசிரியர் வெகு கோபமாக அடித்துக்கொண்டிருந்தார்.அவன் அழுதுகொண்டிருந்தான்.
பார்த்தவுடன் பதறிப்போனேன்.
அண்ணே, என்ன....ஏன்?
என்ன சொன்னாலும் சிரிக்கிறான்...அடிச்சாலும் சிரிக்கிறான்.....
அவன் பாவம்,நல்லவன், அப்பிராணி...எடுத்துச்சொன்னேன்.
வருத்தப்பட்டார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளையாகவே இருந்த அவன் செல்லப்பெயர் 'தக்காளி' உண்மைப்பெயர் செந்தில்.
மதுரை,வைகையாற்றங்கைரையில் ஆழ்வார்புரம் பகுதியில் காவல்துறை சிறார் மன்றத்தில் நான் சிலகாலம் பணியாற்றியபோது பழக்கமானவர்களில் ஒருவன் தக்காளி.
பெயருக்கேற்றபடி குண்டானவன். ஆனால் பெயருக்குக்காரணம் குண்டாயிருந்ததல்ல, தினமும் அதிகாலையில் காய்கறிச்சந்தைக்குச்சென்று லாரிகளிலிருந்து தக்காளிக்கூடை இறக்கும் வேலை செய்துவந்ததே.
சேதுபதி பள்ளியில் நான் பணியில் சேர்ந்தபின் தக்காளியும் அங்கேயே மாணவனானான்.
படிப்புச்செலவுகளை நான் ஏற்றுக்கொள்வதாகக்கூறியிருந்தேன்.
இருந்தாலும் எப்போதாவது தேவைஎன்றால் மட்டுமே கேட்பான்.தக்காளியின் தேவைகளைத்தக்காளியே கவனித்துக்கொண்டது.

அவனைப்பற்றி ஒருபக்கக்கட்டுரை ஒன்றை அண்ணன்
Murugaraj Lakshmanan தினமலர் வாரமலரில் எழுதினார்.தக்காளி தமிழகமெங்குமிருந்து வாழ்த்துக்களைப்பெற்றான்.

தன பகுதியில் படிக்கும் மற்ற சிறார்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் அவனுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று.சிறார் மையத்தை அவனே நன்கு கவனித்துக்கொள்வான்.
மற்றவர்களுக்குச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தில் 10 ஆம் வகுப்பில் அவன் தவறிவிட்டான்.

அடுத்தமுறை தேறிவந்தால், எங்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இப்போது நான் பணிபுரியும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளித்தலைமையாசிரியர் சேதுபதி பள்ளியில் பணிசெய்தவர் என்பதால் தக்காளியைப்பற்றித்தெரியும், இடம் கொடுத்தார்.
12 ஆம் வகுப்பில் 1050 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆவது மாணவனாக பெருமை பெற்ற தக்காளி Bcom படித்து இப்போது ஒரு ஆடிட்டரிடம் பணிசெய்கிறார்.
செந்திலைத்தக்காளி என்றே அவ்வப்போது அழைக்கிறேன்.
திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றன.
பின்தங்கிய தனது பகுதியில் நிறையபேர் நன்கு படிக்கவேண்டும் என்பதே செந்திலின் ஆசை.

மாலை வேளைகளில் செந்திலிடம் படித்தவர்கள் இப்போது நிறைய பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
வேலைப்பழுவின் காரணமாக இப்போது வகுப்புகள் நடத்த முடியவில்லை என்றாலும் சென்ற ஆண்டிலிருந்து தனது பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியருக்குப்பரிசுகள் வழங்குதல்,உயர்கல்விக்கு உதவிகள் செய்தல் போன்றவற்றைச்செய்து வருகிறார். செந்திலிடம் படித்த மாணவர்களே அனைத்து பண உதவிகளையும் செய்கிறார்கள்.



சென்ற ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற விழாவிற்குப்போயிருந்தேன்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு ஆழ்வார்புரம் பகுதிக்குச்செல்கிறேன்.
நிறைய குழந்தைகள் மீசையோடு. பலர் பெரிய பெண்களாக.
ஏதாவது தேவையா? என்று செந்திலிடம் கேட்டேன்,
வழக்கம்போல, தேவையானால் கேட்கிறேன்,என்றான்.

விழா முடிவில் பல இளைஞர்களுடன் மலரும் நினைவுகளைப்பகிர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் அருகே வந்து என்னை அழைத்தாள்.
என்னம்மா,
ஆசீர்வாதம் செய்ங்க சார்,
திடீரெனக்காலில் விழுந்தாள்.
கண் கலங்கி,பதறி... நல்லா இரும்மா...எழுந்திரு....
என்னம்மா...பெரியவங்கல்லாம் இருக்காங்க....
எனக்கு யாரென்றும் தெரியவில்லை.பதறிப்போனேன்.வார்த்தைகள் வரவில்லை.கண்கள் திரையிட்டன.
அந்தப்பெண் சொன்னாள் ,
சார்,எஞ்சினியரிங் படிக்கிறேன்,
செந்திலண்ணன் கிட்டதான் படிச்சேன்.
நீங்க அவரோட சார்,அதான்.....

இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும் வருகின்ற 27 ஆம் தேதி மாலை வைத்திருப்பதாக செந்தில் அழைத்திருக்கிறார். என்ன வேண்டும் என்று கேட்டேன்.சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது.
சார்,இப்ப வகுப்பெல்லாம் எடுக்க முடியல,எங்க பகுதில ஒரு லைப்ரரி ஏற்படுத்தலாம்னு நெனைக்கிறேன்.
முடிவு செய்துவிட்டேன்.

No comments:

Post a Comment