Tuesday 6 May 2014

அலை வாழ்க்கை 
Breaking the Waves படத்தைப்பற்றி முகநூல் மூலமே அறிந்தேன்.
உடனே படத்தைப்பார்த்துவிட வேண்டுமென மனம் துடித்தது.


டென்மார்க் நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெஸ் என்ற பெண்ணே முக்கிய பாத்திரம்.
கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் கட்டுப்பாடான கிராமம். பெஸ், இறை நம்பிக்கை மிகவும் உடையவள்.குழந்தை உள்ளம் படைத்தவள். இயான் என்பவரை மணக்கிறாள். கணவரை உயிராக நேசிக்கிறாள்.
என்னை நிறுவனத்தில் வேலைசெய்யும் இயான் ஒரு விபத்தில் சிக்கி உடல் செயல்பாட்டை இழந்து படுத்த படுக்கையாகிறார்.
'இனி என்னால் பயனில்லை,வேறு திருமணம் செய்துகொள்' என இயான் சொல்ல, மறுக்கும் பெஸ் தனது காதல் இயானைக்குணப்படுத்தும் என நம்புகிறாள்.


இயானுக்கு விபரீத ஆசை ஒன்று தோன்றுகிறது,
பெஸ்,வேறு ஆணுடன் உறவுகொண்டு அதைத் தன்னிடம் கூறவேண்டும்.
அதிர்ச்சியடையும் பெஸ், கணவன் மீது கொண்ட காதலால் அவனின் ஆசையை நிறைவேற்றத்தொடங்குகிறாள்.
ஊர் பழிக்கிறது.பெஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடவுளோடு பேசுவதாக நம்பி எப்போதும் போல அவளே கடவுளாகவும் பேசிக்கொள்கிறாள்.இயேசு அவளுடனே இருப்பதாக ஆணித்தரமாக நம்புகிறாள்.
இயான் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவரின் வார்த்தைகளை நம்ப மறுக்கும் பெஸ் இயான் எழுந்து நடமாடுவார் என நம்புகிறாள்.
அதிர்ச்சிகரமான இறுதிக்கட்டத்தில் பெஸ் இறக்கிறாள்,
இயான் பிழைக்கிறார்.


பெஸ்,பாவி.எனவே இறுதிச்சடங்குகள் செய்யாமல் புதைத்துவிட வேண்டுமென ஆலயத்தில் முடிவுசெய்கின்றனர்.
நண்பர்கள் உதவியுடன் பெஸ் உடலை கடலுக்குள் எடுத்துச்சென்று ஜல சமாதியாக்குகிறார் இயான்.
அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வானிலிருந்து மணியோசை கேட்கிறது.
இரண்டரை மணிநேரம் ஓடும் இப்படம் முழுவதும் பெஸ் ஆக நடித்திருக்கும்  Emma Watson நம் மனதில் நிறைகிறார். கடவுளுடன் பேசும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. ஒரு குழந்தைபோல படம் முழுவதும் நம்மையும் அவருடன் அழைத்துச்செல்கிறார்.
காதல்,அன்பு, நம்பிக்கையின் வலிமையை எளிமையாகக் கூறியதிலேயே இப்படம் வெற்றியடைகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் வானிலிருந்து மணி ஒலிப்பது,பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றபோதும் நம் மனம் நம்புகிறது என்பதே இப்படத்தின் வெற்றி.
இயான்,தன் மனைவியிடம் வேறு திருமணம் செய்துகொள் எனச் சொல்லும்போது ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் இறுதிக்காட்சி என் மனதில் நிழலாடியது.

No comments:

Post a Comment