Tuesday 6 May 2014

ஒற்றை ரோஜா.

தலையில் ஒற்றை ரோஜாவுடன் யாரைப்பார்த்தாலும் எனக்கு டீச்சர் ஞாபகம்தான் வரும்.
சார்,எங்கள் குடும்ப நண்பர்.அவர்களுக்கு இரு பையன்கள். அவர்கள் என் பெற்றோரை மாமா,அத்தை என அழைத்தாலும் நாங்கள் சார்,டீச்சர் என்றே அழைப்போம்.
ீச்சர் நல்ல கருப்பு. எப்போது பாத்தாலும் காதுக்குப்பின் ஒரு ஒற்றை ரோஜா செருகியிருக்கும்.
டீச்சர் என்றாலே எனக்கு அந்த ரோஜாதான் ஞாபகம் வரும்.


வளர்ந்தபின்தான் தெரிந்துகொண்டேன், சார் தனியே வேறு வீட்டில் இருக்கிறார் என்று. ஆனால், வேறு குடும்பம் இல்லை.
எனது திருமணத்துக்குப்பின் தனிக்குடித்தனம் செல்ல வீடு பார்க்க ஆரம்பித்தபோது, டீச்சர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இடத்தைத் தந்தார்கள்.
மரங்களடர்ந்த இடத்தின் நடுவே ஒரு ஓட்டுவீடு. பல ஆண்டுகளுக்குப் பின்பே அதை இடித்துவிட்டு மாடிவீடு கட்டினேன்.
நாங்கள் வாங்கியபின்பும் மரங்களில் விளையும் பழங்களை டீச்சர்தான் பறித்துக்கொள்வார்கள். 'இருவர்தானே' என்று சொல்லியபடி எங்களுக்குச் சிலவற்றைத் தருவார்கள்.
என் மனைவியும் டீச்சரும் நீண்டநேரம் பேசிக்கொள்வார்கள்.
வழக்கமான பக்கத்துவீட்டுப் பரிமாற்றங்களும் நடைபெறும்.
"உனக்கு மாமியார் அருகில் இல்லாத குறை, டீச்சரால் தீர்ந்தது" என்பேன், மனைவியிடம்.
நான் பள்ளி முடிந்ததும் பெரும்பாலும் நண்பர்கள்,ஓவியர்களைப் பார்த்துவிட்டு 7 அல்லது 8 மணிக்கு வீடு திரும்புவேன்.டீச்சர் நின்று கொண்டிருந்தால் ஒரு புன்னகை. சிரித்துக்கொண்டே கேட்பார்கள்,"என்ன, ஸ்கூல் முடிஞ்சு சீக்கிரம் வந்துட்ட".
சிரித்துக்கொண்டே சென்றுவிடுவேன்.
டீச்சர் மகன்களுக்குத் திருமணம் ஆனது.பெரியவன் டீச்சருடன்,இளையவன் அமெரிக்காவில்.
சார் அவ்வப்போது வருவார்.டீச்சரும் அங்கு செல்வார்கள்.
பணி ஓய்வுக்குப்பின் வீட்டையும் இரண்டு பேத்திகளையும் கவனிப்பதே டீச்சரின் முழு நேரப்பணியானது.
"டீச்சர் எப்போதும் ஒற்றை ரோஜா வைத்திருப்பார்கள், எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?" என்று என் மனைவியிடம் சொல்வேன். அதை அவள் ஒரு நாள் டீச்சரிடம் சொல்லியிருக்கிறாள்.
சிரித்துக்கொண்டே," அமுக்குணிப்பய, தலையக் குனிஞ்சுக்கிட்டே நடப்பான்,பிசாவும் மாட்டான்,ஆனா,ரோஜாவப்பாத்து ரசிக்கிறான்" என்று சொன்னதாகச் சொன்னாள்.
விளையாட்டு ஆசிரியை என்பதால் நல்ல ஆரோக்கியம்.அவ்வப்போது மலை நேரம் என் மனைவியும் டீச்சருடன் நடைப்பயிற்சி செல்வதுண்டு.
இரவு 1௦ மணிக்கு மேல் என் அப்பா போன் செய்தார்.
பக்கத்து வீட்டுல இருக்க,உனக்கு விஷயம் தெரியாதா?
என்ன?
டீச்சருக்கு அட்டாக், ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க.சீரியஸ்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.தேர்தல் வகுப்பிற்கு சென்று வந்தபின் இருவரும் வெளியே செல்லவில்லை.
மறுநாள் காலையே என் மனைவி மருத்துவமனை சென்றாள்.
டீச்சருக்கு அட்டாக் இல்ல, புட் பாய்சன்னு சொல்றாங்க,இல்ல,எதுவும் அவங்களே சாப்பிட்டிருப்பாங்கன்னும் சொல்றாங்க. அழுகையுடன் போன் செய்தாள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.விடைத்தாள் திருத்தும் பணி முடிந்ததும் மருத்துவமனை சென்றேன்.
டீச்சரின் உடல் நிலை அப்படியே இருக்கிறது. அமெரிக்க மகன் வந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்.
உள்ளே சென்று பார்த்தேன். வாயில்குழாய்கள், சுற்றிலும் உபகரணங்கள்.
ஒரு குழந்தை போலக் கண்மூடியபடி, டீச்சர்.
வீடு வந்ததும் ஏதேதோ சொன்னாள் மனைவி.
முதுமையில் கொடுமை தனிமை.
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
வீடு திரும்பும்போது சிரிப்பு கலந்த கணீர்க்குரல் கேட்கும்.
"என்ன சீக்கிரம் வந்துட்ட"

No comments:

Post a Comment