Wednesday 7 May 2014

Artist

   ஓவியன்

               ஓவியக்கல்லூரியில் பயிலும் இருவரின் காதலை ஓவியத்துடன் சொல்லும் படம் ஆர்டிஸ்ட்.
பெற்றோரின் எதிர்புகளை மீறி ஓவியக்கல்லூரியில் சேரும் காயத்ரி, அவளின் சீனியர் மைக்கேலின் பேச்சுக்களால் கவரப்படுகிறாள்.ஓவியக்கலை குறித்த மைக்கேலின் பார்வைகள் கயத்ரியைக் காதல் கொள்ள வைக்கின்றன.
மைக்கேலின் விருப்பப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத்தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் காயத்ரி. காதலர்கள் தனியே வசிக்கத்தொடங்குகின்றனர்.
மைக்கேல் ஓவியத்தில் சாதிக்க விரும்புகிறான். காதலனுக்காகப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள் காயத்ரி.அவளின் சம்பாத்தியத்தில் குடும்பமும் நடத்திக்கொண்டு,மைக்கேலுக்குத்தேவையான வரைபொருட்களை வாங்குவது சிரமமானதாக இருக்கிறது.
ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான்,மைக்கேல்.மருத்துவச் செலவுகளுக்குக் கல்லூரி நண்பன் அபினவ் உதவுகிறான். வாழ்க்கை மேலும் சிரமமானதாகிறது. கடுமையாக உழைக்கிறாள் காயத்ரி.கண் பார்வையற்ற நிலையிலும் மைக்கேல் ஓவியம் வரைய விரும்புகிறான்.

பல்வேறு வண்ணங்களை வாங்க இயலாத நிலையில்  காயத்ரிவருத்தப்படும்போது தன்னிடம் ஒரு பெட்டி ப்ருஷ்யன் நீலம் இருக்கிறது,அதை மைக்கேலிடம் கொடு என அபினவ் கூறுகிறான்.காயத்ரி தயங்க, மைக்கேலுக்குக் கண் தெரியாது என்பதால் கண்டுபிடிக்க இயலாது எனச் சமாதானம் சொல்கிறான். ,பிரஷ்யன் நீல வண்ணங்களை அபினவிடம்  பெற்று மைக்கேலுக்குத் தருகிறாள்,காயத்ரி..அவனும் பலவண்ணங்கள் கொண்டு வரைவதாக எண்ணிக்கொண்டு ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைகிறான்.
Dreams in Prussian Blue  என்ற தலைப்பில் ஓவியக்காட்சி தொடங்கும் வேளையில்
தனது ஆசைக்கு காயத்ரி இணங்க மறுத்ததால் ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைந்த உண்மையை அபினவ்  ,தன் மனைவிமூலம் மைக்கேலிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.
பல்வேறு வண்ணங்களை மனக்கண்ணில் கண்டு வரைந்த ஓவியங்கள் ஒரே வண்ணத்தில் இருப்பதை அறிந்து கோபம் கொள்கிறான், மைக்கேல்.
தான் ஏமாற்றப்பட்டதாக மனம் வெறுத்த மைக்கேல், காயத்ரியை தன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறான்.
மைக்கேலாக பகத் பாசில், காயத்ரியாக ஆன் அகஸ்டின் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கலைஞனாக இருந்தாலும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆணாதிக்கவாதியாக மைக்கேல்.
காலம் காலமாக தான் விரும்பியவனுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் பெண்ணாக காயத்ரி.
கலைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் வெறியை பகத் பாசில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.சாதிக்கவேண்டும் என்ற வெறியே தன்னைச்சார்ந்தவர்களை  துன்பத்திற்குள்ளாக்குகிறது என்றாலும் ஒரு கலைஞன் பலவேளைகளில் தன்னைப்பற்றிமட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.
அன்பு,அரவணைப்பிற்காக ஏங்குபவள் என்பதாலேயே எளிதில் பெண்ணைத் தன ஆசைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆண்கள் பெரும்பாலான ஆண்கள் நம்புகின்றனர். இயல்பாக அபினவின் ஆசைகளைக் காயத்ரி கடந்துசெல்லும் காட்சிகள் கவித்துவமானவை, பெண்ணின் இயலாமையையும் வெளிப்படுத்துபவை.
ஓவியக்கலையின் பரிமாணங்களை விவாதிக்கும் இப்படம் காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்துகிறது.
புதுமை பேசுபவர்களின் செயல்பாடுகளில், மன இடுக்குகளில் தேங்கிக்கிடக்கும் கசடுகளை, பழமை  முகமூடிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது  இந்த மலையாளத்திரைப்படம்.
Dreams in Prussian Blue ஆங்கில நாவலை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்  சியாமாபிரசாத்.

No comments:

Post a Comment