Sunday 20 October 2013

பவா

எல்லா நாளும் கார்த்திகை
வாசிப்பை நேசிப்பவர்கள் அறிந்த பெயர் பவா செல்லதுரை.
அவரைப் பற்றிப் பிறர் எழுதியவற்றை வாசிப்பவர்களுக்கு
திருவண்ணாமலையில் அவர் வீட்டிற்கு நாமும் போக மாட்டோமா? என்ற ஏக்கம்  ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
அவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமையானவை,இனிமையானவை,வலிமையானவை.
வம்சி வெளியீடாக வந்திருக்கும் "எல்லா நாளும் கார்த்திகை"
பவாவின் கட்டுரைத்தொகுப்பு.
கலை,இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்த ஆளுமைகளைப் பற்றிய பாவாவின் சொற்சித்திரங்கள் நிறைந்தது ,எல்லா நாளும் கார்த்திகை.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது அந்த ஆளுமைக்கு அருகில் நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்கிறார் பவா.முடிவில் நாமே அவராக மாறி அந்த ஆளுமையுடன் கலந்து விடுவதே பவாவின் வெற்றி.

பாலு மகேந்திரா பற்றியது முதல் கட்டுரை.
புதிய படத்தின் கதை பற்றிய உரையாடலில் பாலு மகேந்திரா கேட்கிறார், 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்"
பவாவைப் போலவே நானும் திணறிப்போனேன்.
விடை ஆச்சரியப்படுத்தியது. மறுநாள் பள்ளியில் ஓய்வு நேரத்தில் நண்பர்களிடம் கேட்டேன்.செல்பேசியில் ஒருவர் தேடித் திரைப்படத்தை ஓடவிட்டார். அனைவருக்கும் அந்தக் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது."இது ஞாபகமே இல்ல"
என்றனர்.அது பற்றிய பாலு மகேந்திராவின் வார்த்தைகள் ,
"ஒரு விபச்சார விடுதியிலிருந்து.ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல,படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது.ஏன்னா படத்தோட ட்ரீட்மெண்ட்ல அது காணாமல் போயிடுது"
இதைப்போலவே பல்வேறு உணர்வுகளின் கலவையில் அனைத்து ஆளுமைகளையும்  நம்மோடு கலந்துவிடுகிறார் பவா.

No comments:

Post a Comment