Sunday 17 March 2013

கொடும்பாளூர்....காலம் சிதைத்த கலை.




 அன்று...
முற்காலச் சோழர் காலம். சோழவள நாட்டின்  எல்லையைக்காத்து,  சோழப் பேரரசர்களுடன் இணைந்து போரிட்டுப்பல வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்த சிற்றரசர்களுள் ஒருவர் இருக்குவேளிர்கள்.
கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்டவர்கள். இந்நகரம் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது.
கவுந்தியடிகளுடன் மதுரை செல்லும் வழியில் கோவலனும் கண்ணகியும் கொடும்பாளூர்க் கோட்டம் கடக்கின்றனர்.
சிவபெருமானின் திரிசூலம் போல மூன்று பெருவழிகள் இங்கிருந்து மதுரை செல்கின்றன.
இருக்குவேளிர்கள் சோழர் படைத்தளபதிகள். ஈழப்போரில் முக்கியப்பங்கு வகித்தவர்கள்.சோழ அரசகுடும்பத்தினருடன் மண உறவு கொண்டவர்கள். இவர்களுள் முக்கியமானவர் பூதி விக்கிரம கேசரி. மாவீரன்.இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன்.
பூதி விக்கிரம கேசரிக்கு கற்றளிப் பிராட்டி, வரகுண நங்கை என்ற இரு மனைவியர். இம்மூவரும் சேர்ந்து எழுப்பிய கோயிலே மூவர் கோயில் என்ற  ஒரே வரிசையில் ஒரே விதமாகக் கட்டப்பெற்ற மூன்று சிவன் கோயில்கள்.
பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவாக தமிழகமெங்கும் வணிகம் செய்தனர்.

இன்று...
மூவர் கோயில், மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் கொடும்பாளுர் சத்திரம் என்ற  கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.முதற் கோயிலும் திருச்சுற்றும் அழிந்துபட்ட நிலையில் இரு கோயில்கள் மட்டுமே உள்ளன.கோயில் விமானத்தின் உள்  கட்டமைப்பு தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு முன்மாதிரியானது.

ஒருகாலத்தில் தலைநகராக இருந்த இடம் இன்று தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உன்னதமான கலைப் பாணியை உடையவர்கள் சோழர்கள். கோயிலின் சுவர்களில் உள்ள சிற்பங்கள் இயல்பான உருவ அமைப்பு உடையவை.அரை அடிக்கும் குறைவான அளவுள்ள பல சிற்பங்கள் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு விளங்குகின்றன.



வயல் வெளியிடையே கலைப் பொக்கிஷமாக இருக்கும் மூவர் கோயில் மனதில்  மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
இக்கோயிலில்  பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டும் காலத்தால் சிதைந்தும் காணப்படுகின்றன. அவை சொல்லாமல் சொல்கின்றன நாம் வாழ்ந்த கதையை, வாழ வேண்டிய முறையை.






No comments:

Post a Comment