Friday 2 November 2012

ஆயிரம் பக்க அற்புதம்

   " அஞ்ஞாடி" என்று தோன்றியது,வாசித்து முடித்தவுடன்.
மனமெங்கும் மகிழ்ச்சியும் துக்கமும் எல்லாமும் கலந்த கலவையாய் நிறைந்தது.
வரலாற்று நாவல்களே நம்மை அதிகம் கனவுலகில் சஞ்சாரிக்க வைப்பவை.என் இனத்தின்,தமிழனின் பெருமை என மார்தட்ட வைப்பவை.
வந்தியத் தேவனையும் வானதியையும் மறக்க முடியாமல் பிள்ளைகளின் பெயர்களாக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
அரசிளங்குமரிகள் ,அரண்மனைகள், போர்கள்,எனப் பல்வேறு விவரணைகளில் மயங்கியிருக்கிறோம்.

வாழ்க்கை என்பதுதான் என்ன?
காலம் காலமாக விடை தேடப்படும் கேள்வி.

பூமணியின் தேடலின் விளைவே " அஞ்ஞாடி".
கந்தக பூமி என்றழைக்கப்படும் கோவில்பட்டி பகுதியிலிருந்து ரத்தமும் சதையுமாய் வாழ்க்கையை அறுவடை செய்திருக்கிறார்.ஒருவன் வாழ்ந்த கதை -ஒரு இனத்தின் பெருமையாக மார்தட்டி மீசை முறுக்கப்படும் இக்காலத்தில் மூத்த குடிகளின் வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார்.
வளமான வட்டார வழக்கு
சொலவடைகள்
நாட்டார் பாடல்கள்
தொன்மக் கதைகள்
அரசு ஆவணங்கள்
மதங்கள்
இனக்குழுக்கள் 
என ஆய்வு செய்ய வேண்டிய பல செய்திகளை அற்புதக் கலவையாகப் படைத்து தமிழ் நாவல்களிடையே அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் பூமணி.

வட்டார வழக்கும்,இயல்பும் நவீனமும் கலந்த மொழிநடையுடன் புத்தனைப் போல வாழ்வை உணரச் செய்கிறது
 " அஞ்ஞாடி".
 ஏறத்தாழ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக 300 ஆண்டுகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கும்    " அஞ்ஞாடி" நம் முன்னோர்களின் எளிய வாழ்வு,பழக்க வழக்கங்கள், உணவு, கலை, கலாச்சாரம் என எல்லாவற்றையும் மீட்டுக் காட்டுகிறது.
நிறைய இழந்திருக்கிறோம்  என்ற கவலையையும் இயற்கையோடு இணைந்த வாழ்வின் சுகத்தையும் நம் மனத்துள் எழுப்புகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையை அறிமுகம் செய்து வைக்கிறது.

வெறும் பெயர்களும் ஊரையும் தவிர என் முன்னோர்களைப்பற்றி ,அவர்கள் வாழ்வைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறேன்?.என் ஆச்சி,தாத்தாவிடம் அவர்களின்,முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்காமல் விட்டுவிட்டோமே?என்ற வருத்தம்  எழுகிறது. இதுதான் " அஞ்ஞாடி"யின் வெற்றி என எண்ணுகிறேன்.

" அஞ்ஞாடி" நம் முகம் தேட வைக்கும் கண்ணாடி.

No comments:

Post a Comment