Tuesday 23 October 2012

தமிழா! தமிழா!

கடந்தவாரம் செய்தித் தாளில் வந்த செய்தி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அரசு பள்ளி பெண் தமிழாசிரியரை தாக்கிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன், இப்பள்ளியில் பணிபுரியும் பெண் தமிழாசிரியை ஒருவரை, அங்கு படிக்கும் சில மாணவர்கள் கேலி செய்துள்ளனர். தட்டிக்கேட்டபோது, ஒரு மாணவர் அந்த ஆசிரியையை கீழே தள்ளி, கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவரை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, தலைமையாசிரியை அங்கையற்கண்ணி உத்தரவிட்டார்.

பெண் தமிழாசிரியை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழாசிரியர் கழகம் சார்பில், நேற்று சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், மாநில துணைத் தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்பின், மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இளங்கோ கூறுகையில்,""பல இடங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கேலி,கிண்டல் செய்கிற போக்கு தொடர்கிறது. தமிழாசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.இலவச கட்டாய கல்வி திட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் பாடம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைக்கு வரவேண்டும்,'' என்றார்.


இதை வாசித்தவுடன் என்ன தோன்றுகிறது? ஒருவழியாக மாணவனுக்கு தண்டனை தரப்பட்டுவிட்டது.ஆனால் பத்து நாட்களுக்குப் பின் அந்த ஆசிரியையின் நிலை?
இதைவிட தமிழாசிரியர் கழகத்தினரின் கூற்று-  எதெற்கெடுத்தாலும் அரசு,அல்லது கல்வித்திட்டத்தைப்  பழி கூறும் போக்கைக் காட்டுகிறது.


யார் குற்றவாளி?

'செய்முறைத் தேர்விற்கு 50 மதிப்பெண்கள் என்னிடம்தான்' என்று பாயும் காட்டியே வகுப்பெடுக்கும் அறிவியல் ஆசிரியர்கள்.
எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் செய்முறையில் 47 மதிப்பெண்ணுக்குக் கீழ் குறைக்க மாட்டார்கள் என்று தெரிந்தே பயப்படும்(? ) மாணவர்கள்.
உயர் படிப்புகளுக்கு மொழிப்பாடம் தேவையில்லை - என்று அடிக்கடி கூறும் ஆசிரியர்கள்.
G.O க்களைத் தேடுவது, பணிமாற்றம்,போராட்டம் என்று மட்டுமே இயங்கும் சங்கங்கள்.
சம்பளம் பைசா குறைந்தாலும் கணக்குப்பார்த்து, மாணவனின் மதிப்பெண் ஏன் குறைகிறது? என்று கணக்குப் பார்க்காமல்,ஓரளவு உண்மையிருந்தாலும்- சமூகம்,குடும்பம்,கலாச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசித் தப்பித்துக்கொள்ளும் ஆசிரியர்கள்.
ரௌடியாகத் திரிந்தாலும் அழகிய பணக்காரப்பெண் காதலிப்பாள் என்று திரைப்பாடம் கற்ற மாணவர்கள்.

இப்படியே மாற்றி மாற்றி அடுத்தவரை மட்டுமே குற்றம் கூறிக்கொண்டே இருந்தால் என்னதான் தீர்வு?

            பல ஆசிரியர்கள் மொழிப்பாடம்தானே என்று வகுப்பறையில் கூறுகிறார்கள்.  மொழிப்பாட ஆசிரியர்களும் இலக்கணம்,இலக்கியம் என்று மரபான முறையில் கடினமாகக் கற்பிக்கின்றார்கள்.மாணவரின் பங்கேற்பு என்பதே இல்லாத போதனா முறைகளை மாற்றிப் புதிய முறைகளை மேற்கொள்ள ஆர்வமில்லாத ஆசிரியர்களே அதிகம்.
அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு தூங்குகிறார்கள் என்று பொதுமக்கள் பேசுவதற்கு யார் காரணம்?
வெறும் அரட்டல்களும் கண்டிப்பும் -காலாவதியாகிவிட்ட செயல்பாடுகள்.
வகுப்பறைச்  சூழலை இனிமையாக்கும் வழிகளை ஆசிரியர்கள்தாம் கண்டறிய வேண்டும்.
நம் பிள்ளைகளின் எதிகாலத்தில் வைக்கும் அக்கரையில் சிறிதளவேணும்  மாணவர்கள் நலனில் காட்டினால் எதிர்காலத் தலைமுறை வளம் பெறும்.

மற்ற குறைகள் இருந்தாலும் முதலில் தம்மை மாற்றிக்கொள்ள முன் வராத ஆசிரியர்களை வரலாறு என்றுமே மன்னிக்காது.


No comments:

Post a Comment