Tuesday 23 October 2012

மக்கள் கலைஞன்







இசை என்றவகையில் என் மனதில் பல்வேறு உணர்வுகளை கர்நாடக இசை ஏற்படுத்துகிறது.ராகங்களை பற்றிய அறிவு சிறிதும் எனக்கில்லாவிட்டாலும் நவீன இசை போலவே கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கும் செல்வதுண்டு.
மகாராஜபுரம் சந்தானம்,பாலமுரளி கிருஷ்ணா,M .S.சுப்புலட்சுமி,அருணா சாய்ராம்,சுதா ரகுநாதன்,நித்யஸ்ரீ மகாதேவன் எனப் பலரின் பாடல்களுக்கு,குறிப்பாக தமிழில் பாடியவற்றிற்கு நான் அடிமை.

இசைக்கருவி இசையில் என்றென்றும் என் உள்ளம் கவர் கள்வன் குன்னக்குடி வைத்யநாதன்.பல கச்சேரிகளை நேரில் ரசித்திருக்கிறேன் .
பல முறைகள் அவரிடம் பேசியுமிருக்கிறேன் .
சில ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற தமிழக அரசின் கிராமியக் கலைக் குழுவினருடன் நானும் கரகம் ஆடச் சென்றிருந்தேன்.தமிழ்நாடு விடுதியில் தங்கியிருந்தோம்.அங்கே குன்னக்குடியும் இருப்பதாக அறிந்து அனைவரும் அவர் அறைக்குச் சென்றிருந்தோம்.அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
ஒருவர் கதவைத் திறக்க,வந்தவர் ஏதோ  கூறினார்.
என்ன?என்று கேட்டார் குன்னக்குடி.
கதவைத் திறந்தவர் கூறினார்,"பக்கத்து அறையில போலிஸ் IG இருக்காராம்.சத்தம் ரொம்ப வருதாம்.அமைதியா இருக்கச் சொல்றாராம் "
வந்தவரை உள்ளே அழைத்து குன்னக்குடி சொன்னார்,
" அவன்கிட்டப் போய்ச் சொல்லு,பக்கத்துல இருக்கறது குன்னக்குடின்னு"

எந்தத் தொந்தரவும் இல்லாமல் வெகுநேரம் பேசியபின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

மற்ற கர்னாடக இசைக்கலைஞர்களைப் போலின்றி மக்கள் விரும்பியதையும் தந்தவர் குன்னக்குடி.
அவரது கச்சேரி மூன்று பிரிவுகளாக இருக்கும்.முதலில் கர்னாடக இசையை வாசிப்பார்.அதன் பின் திரைப்படப் பாடல்கள்.பழைய பாடல்கள் முதல் அப்போது வெளியான பாடல்கள் வரை அனைத்தும் வாசித்தபின் பக்திப்பாடல்கள் தொடர்ந்து வாசிக்கப்படும்.ரசிகர்களும் கூடவே பாடிக்கொண்டே கேட்பது கண்கொள்ளாக் காட்சி.

இசையோடு அவர் முகம் காட்டும் பாவங்களும் தனித்தன்மையானவை.
கர்நாடக இசையை மேற்கத்திய இசைக் கருவியான வயலினில் வாசித்ததோடு மட்டுமில்லாமல் வயலினை,பக்க வாத்தியத்திலிருந்து மையத்திற்குக் கொணர்ந்தவர் குன்னக்குடி.
இந்த இணைப்பிலுள்ள பாடலைக் கேளுங்கள், அந்த மகத்தான கலைஞன் மக்களை மயக்கிய விதம் புரியும்....

No comments:

Post a Comment