Monday 22 October 2012

சூப்பர் மேன் வருவாரா?

அமெரிக்கக் கல்வி பற்றிய ஆவணப் படமான Waiting for Superman பார்த்தேன்.2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்கக் கல்விமுறையின் சீரழிவுகளையும் எதிர்காலத்தேவைகளையும் அலசும் ஆகச்சிறந்த படம்.

"சூப்பர் மேன் -உண்மையில்லை என்று அம்மா சொன்ன நாளில்தான் நிறைய அழுதேன்.கிறிஸ்மஸ் தாத்தா வரமாட்டார் என்பதைவிட சூப்பர்  மேன் வரமாட்டார் என்பதுதான் என்னை அதிகம் பாதித்தது.ஏனெனில் சூப்பர் மேன், கெட்டவங்களை அழித்து நல்லவங்களை காப்பாற்றுவார்." என்று ஒரு ஆசிரியர் கூறுவதுடன் படம் தொடங்குகிறது.

ஒவ்வொருநாளும் அதே சடங்குகள்.....காலை உணவு,புத்தகப் பை, பள்ளிக்குச் செல்லுதல்.எதற்காக?

சில குழந்தைகளிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் ? என்ற கேள்வி கேட்கப்படும்போது ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையைக் கூறுகின்றனர்.குழந்தைகள் தம் எதிர்காலம் குறித்த கனவுகளை, நண்பர்கள்,பெற்றோர்,மற்றும் ஆசிரியரிடமிருந்து பெறுகிறார்கள்.

4 ஆம் வகுப்பில் முதலிடம் பெறும்  மாணவர்கள் 5,6,7,8 என மேலே செல்லச்செல்ல பின்னடைகிறார்கள்.குறை யாரிடம் உள்ளது?
மாணவர்? ஆசிரியர்? கல்வித்திட்டம்?
 எனப் பல கேள்விகளுடன் தொடங்கும் படம் அமெரிக்கக் கல்விமுறை மற்றும் ஆசிரியர்களின் நிறை குறைகளை அலசுகிறது.

அமெரிக்காவில் அருகமைப் பள்ளிகளில்தான் குழந்தைகள் கல்வி பயில வேண்டும்.கிராமம் மற்றும் நகரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிகள் தரத்தில் குறைந்ததாக உள்ளன.பல பள்ளிகள் 'இடைநிற்றல் தொழிற்சாலை'களாக ( dropout factories) இயங்குகின்றன.எட்டாம் வகுப்புவரை தள்ளப்பட்டு வருபவர்கள் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பை பெரும்பாலும் கைவிடுகின்றனர்.

40 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் இதுவரை பயின்றவர்கள் 60,000 பேர்.அதில் கல்லூரிக்கல்வி முடிக்காதவர்கள் 40,000 பேர்.

அரசுப்பள்ளிகளில் குறைந்த இடங்கள்,ஆசிரியர்களின் ஆர்வக்குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலான பள்ளிகள் தரம் குறைந்ததாக உள்ளன.ஒரு சில பள்ளிகளே தரமானதாக உள்ளன.

இங்கே நான் சில செய்திகளைச்  சொல்ல வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
 "அமெரிக்க பள்ளிகளும் இந்தியா போலத்தான்" என்றுதானே? அதுதான் இல்லை.மேலே சொல்லப்பட்ட செய்திகள் அமெரிக்க கல்விமுறையின் அவலத்தைக் காட்டினாலும் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நம் நாட்டின் ஆகச்சிறந்த பள்ளிகளைப்போல் உள்ளது. விசாலமான வகுப்பறைகள்,சிறந்த கட்டிடங்கள்,உபகரணங்கள்,
வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வசதிகளில் எந்தக்குறையும் இல்லை.

இப்போது ஆவணப்படத்தைத் தொடருவோம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கல்வியைத் தொடர இயலாதவர்களே அதிகம் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவரவர் குற்றங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒருவர் குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைவாசம் பெறுகிறார் எனக்கொண்டால் ,
குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெரும் 1   சிறைவாசிக்கு ஆகும் செலவு
33,000 X 4= 1,32,000 டாலர்கள்.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக் கல்வி வரை ( 13 ஆண்டுகள்) ஆகும் செலவு
8,300 X 13 = 1,07,900 டாலர்கள்.
கல்வியைவிட சிறை பலமடங்கு மக்களின் பணத்தைச் செலவாக்குகிறது.
எனவே கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெரும் உயர் பணிகளுக்கு 12 கோடியே 10 இலட்சம் பேர் தேவை.ஆனால்,5 கோடி அமெரிக்கர்கள் மட்டுமே இதற்குத் தகுதியுடன் இருப்பார்கள்.மீதிப் பணியிடங்களை வெளிநாட்டினர் பெறுவார்கள்.இது அமெரிக்காவைப் பெரிதும் பாதிக்குமென பில் கேட்ஸ் கூறுகிறார்.

தற்காலக் குழந்தைகள் கற்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையல்ல.பல புதிய செயல்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களின்  கூற்றுப்படி,
 'சரியான வழிமுறைகள் கல்வியின் தரத்தை அதிகரிக்கும்'.

சுருக்கமாகக் கூறினால்,
தரமான ஆசிரியர்கள்
அதிகக் கற்றல் நேரம்
உலகத்தரமான கல்வி
உயர்ந்த எதிர்பார்ப்பு ,செயல்முறைகள்
பொறுப்பு உணர்ந்து செயல்படுதல்

ஆகியவை கல்வித்தரத்தை உயர்த்துவதாக கண்டறியப் பெற்றுள்ளன.எனவே சூப்பர் மேனைப் போன்ற ஆசிரியர்கள்தாம் இப்போதைய தேவை.என ஆவணப்படம் நிறைகிறது.

இந்த ஆவணப்படம் என்னுள் பல எண்ணங்களை எழுப்பியது.


அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாத பள்ளிகள்,தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இலவசங்களில் இயங்கும் அரசுகள்,பிள்ளைகளை ஏதும் செய்ய இயலாத பெற்றோர்,பணி பெறும்வரை போராடி அதன் பின் ஓய்வு வரை ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்,மாற்றிமாற்றிக் குறை கூறியே கழியும் கல்வித் திட்டங்கள் இன்னும் பலப் பல தடைகளைத் தாண்டியும் சிறந்த சில  மாணவர்கள் -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமான சூப்பர் மேன்களைக் கண்டறிந்து அவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து தாமாகவே தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.கேட்பாரில்லாத இன்றைய சூ ழல், ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் மனப்புலம்பலின் இறுதியில் பெருவெடிப்பாக மாறக்கூடும்.
ஆசிரியர்,பெற்றோர் கலந்துரையாடி புதிய செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பு வெறுப்பு இன்றி விவாதம் செய்வோமா?

No comments:

Post a Comment