Monday 13 August 2012

என் வகுப்பில் நான்

           6,7,8 வகுப்புகள் எடுக்கும் அனைத்து  ஆசிரியர்களும் கண்டிப்பாக SSA  சார்பாக நடத்தப்படும் மாதாந்திரக் கருத்தாய்வுக் கூட்டத்தில் பங்குபெறவேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தியதால் எங்கள் பள்ளியிலிருந்து ஏற்கனவே சென்றுகொண்டிருந்த நால்வருடன் புதிதாக நான்கு ஆசிரியர்கள் சென்றிருந்தோம். இதுவே எனக்கு முதல் பயிற்சி.
ஏறத்தாழ 70 ஆசிரியர்கள்.18 பேரைத்தவிர அனைவரும் பெண்கள்.
          பொதுவாக மாநிலமெங்கும் CCE முறையில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும் பற்றிய விவாதமே அன்றைய பயிற்சி.  மூன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் .
எப்போதாவது பேசுவார் ஒருவர்.சத்தம் அதிகமாகும்போது அமர்ந்துவிடுவார்,
மற்றொருவர் ," Teachers....Please..LISTEN ...கவனமா கேளுங்க...officers visit  வருவாங்க....Please ..."என்று கூவிக்கொண்டே இருப்பார்.
மூன்றாவது ஆசிரியர் பயிற்றுநர்,
ஒவ்வொரு கேள்வி,பதிலையும்   வாசிக்கும்போதும் , அது குறித்த கருத்துக்கள்,அருகில் இருப்போருடனான பேச்சு என வகுப்பில் சலசலப்பு  அதிகரித்தால் , சிரித்தபடி
 'Teachers.....Masters... கவனிங்க.நீங்களா பேச ஆரமிச்சிடுவீங்களே..."
என்று  சமாளித்து தொடர்வார்.ஆண் ஆசிரியர்கள் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தோம்.எல்லாவற்றையும் சமாளித்தார்.

  இடைவேளை நேரத்தில் ,
'வகுப்பு நல்லா போகுதே...பரவாயில்ல,போரடிக்காம இருக்கு.என்ன இன்னும் ஆழமா விவாதிக்கணும்.நம்மோட கருத்துக்கள அதிகமா கேக்க மாட்டேங்கறாங்க"
என்று சக ஆசிரியர் கூறியது சரி எனப்பட்டது.
வீட்டிற்கு வந்தபின் அன்றைய வகுப்பு பற்றி  யோசித்தேன்.சில குறைபாடுகள் இருந்தாலும் முழு நாளும் வகுப்பும் சுவாரசியமாக நடத்திச்செல்லப்பட்டதற்கு என்ன காரணம்? பயிற்றுநருக்கும் ஆசிரியர்களுக்குமிடையே கருத்து பரிமாற்றம் நன்றாக இருந்தது.சத்தம் அதிகமாகும்போதேல்லாம் சிரித்தபடியே சமாளிக்கப்பட்டது.ஒரு நாள் முழுவதும் ஒரே தலைப்பு சார்ந்து ஒரு வகுப்பை கலகப்பாக நடத்த முடிகிறது.மகிழ்ச்சி.

அப்படியே நம் வகுப்பறைக்கு வருவோம்.

"ஏய்,அமைதியா இரு.ஏன் இப்படி கத்துறிங்க?அப்படியே கழுத்த   திருகி கொன்னுடுவேன் ',
வெளிய போடா...பாடம் நடத்தும்போது கவனிக்காம விதண்டாவாதமா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்க....நாயி..."
இது போல் பலவும்.வகுப்பறையில் சத்தம் அதிகமானால் நமக்கு வெறி பிடித்து விடுகிறது.

"உங்கள் வகுப்பு   ஒரே சத்தமா இருக்கு ,கொஞ்சம் அமைதியா பாத்துக்கோங்க,பசங்கள கண்ட்ரோலா வச்சிக்கணும்."
என்று மென்மையாகவும் சில சமயங்களில் கடினமாகவும் தலைமை ஆசிரியரிடமிருந்து வார்த்தைகள் வரும் போது நம் மனம் சுருங்கிவிடுகிறது.


என்ன இருந்தாலும் நம் வகுப்பறையில் நாமே ராஜா.
அத்துணை ஆசிரியர்களை அவ்வளவு நேரமும் எப்படி ஒரு ஆசிரியர் பயிற்றுநரால்  சமாளிக்க முடிகிறது?
என்ற கேள்வியின் விடையிலேயே என்  வகுப்பில் 45 நிமிடங்களை எப்படி இனிமையாக்கலாம்?என்பதன் பதிலும் இருக்கிறது.


No comments:

Post a Comment