Saturday 4 August 2012

கேள்வி விடைகள்.

நசிகேதா! 
மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல்  கேட்டுக்கொள்.சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன்.வாத்தியக் கலைஞர்களை தருகிறேன்.ஆண்களை மயக்குகிற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன்.இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள்.
ஆனால்... 
மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே! 
                                                                                                                - கட உபநிடதம் 
                                               மரணத்தைப் பற்றிய சிந்தனைகளும் தத்துவங்களும் யாரேனும் தெரிந்தவர்களின் மரணத்தின் போதே தோன்றி விவாதிக்கப்பட்டு மறக்கப் படுகின்றன.
ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போதும் மரணச் செய்திகளையே முதலில் படிக்கிறேன்.அஞ்சலிகளில் வரும் நிழற்படங்களை உற்று நோக்கி அவர்களின் பிறப்பு, இறப்பு தேதிகளைப் பார்த்து வயதையும் கணக்கிடுகிறேன்.
வயதானவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.குறைந்த வயதுடையவர்களின் மரணம், ஏன்? எப்படி? என்று கேள்விகளையும் மரணம் பற்றிய விடையிலா எண்ணங்களையும் நினைவில் சுழல விடுகிறது.
பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுவதாக நம்புகிறேன்.வாழ்க்கைப் பயணமே மரணத்தை நோக்கியதுதானே!
இடையில் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்,எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,பணத்திற்கான படிப்பு, வேலை,திருமணம்,வம்சம்  வளர்க்க பிள்ளைகள்,அவர்களின் மேல் திணிக்க கனவுகள்.
ஏன் பிறந்தேன்? என்பதைவிட எதற்கு பிறந்தேன்?என்ன செய்கிறேன்? செய்யப்போகிறேன்? என்ற கேள்விகளே  மனதைப் பிசைகின்றன.
ஓடி  ஓடி,தேடித் தேடி - எதை? எதற்காக?.
நிகழில் வாழச் சொல்கிறான் புத்தன்.
எது நிகழ்? வரும் நொடி -எதிர்காலம்.உடனேயே அது இறந்த காலமாக ஆகிவிடுகிறது.
இடையில் இருந்தும் இல்லாமலிருக்கிறது நிகழ்.
நிலையாமை,மாயை என்னென்னவோ சொல்லப்பட்டாலும் நிலையானதில் நிலையில்லாதது நிலைத்திருப்பதாகவே தோன்றுகிறது.
தேடல்கள் விடையை நோக்கி நகர்த்துவதாகத் தோன்றினாலும் வட்டமாய் ,தொடங்கிய இடத்திலேயே முடிவும் விடை ஏதுமின்றி.
என்னமோ இருக்கிறது. தேடலே புதிய கதவுகளை உருவாகித் திறக்கவும் முயல்கிறது.எப்போதும்போல் கணியன் பூங்குன்றனின் பாடலைப் படித்துக்கொள்கிறேன்.
அதுவே   கேள்வி போலவும் விடை போலவும் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

No comments:

Post a Comment