Saturday 18 August 2012

விருது வாங்குதல்


"மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்
குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர் சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர்.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,""சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன.
வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,'' என்றார்.

தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு
செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்."

                                                                                                                   - பத்திரிக்கை செய்தி.

இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான முயற்சிகள் தீவிரமடைந்து ஏறத்தாழ முடிவுகள் உறுதி ஆகியிருக்கும்.மேற்கண்ட செய்தி நல்லாசிரியருக்கான தகுதிகளை கூறுகிறது.முதல் தகுதியே பணிமூப்பு.

ஓய்வுபெறும்போது நல்லாசிரியர் என்று பாராட்டி விருது வழங்குவது அந்த ஆசிரியரின் முயற்சிக்கு வெகுமதி.
பெரும்பாலும் ஓய்வு பெறவுள்ள தலைமையசிரியர்களே மாநில,மத்திய விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
வலிமையான பின்னணி இருந்தால் மட்டுமே தற்போது பணியிலிருப்பவர்கள் விருது வாங்குகின்றனர்.சில நேரங்களில் ஆள் கிடைக்காவிட்டால் யாராவது ஒரு ஆசிரியருக்கு விருது யோகம்.

தற்போது பெருமைக்காக,பெயருடன் சேர்த்துக் கொள்ள மட்டுமே விருதுகள். விருது பெற்றவர்கள் பெரும்பாலும் பள்ளியில் பணிசெய்வதைவிட' பிற' பணிகளைச் செய்பவர்கள்.பெரும் விபத்துக்களை சந்தித்த 'பள்ளிகளை' தொடங்கியவர்கள் விருது வாங்கிய ஆசிரியர்களே.

  இப்போது சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கினால் ,விருது பெற்றுவிட்டோம் என்ற உணர்வே அவர் பணியை  மேலும் சிறப்பாக மாற்றும்.
ஓய்வு பெறப்போகும் ஆசிரியருக்கு ஒன்றும் இளம் ஆசிரியருக்கு ஒன்றுமாக இரு விருதுகள் வழங்கலாம்.
எப்படியானாலும் விருது வாங்க விரும்பும் ஆசிரியருக்கே விருது கிடைக்கும்.
என்னதான் செய்வது?
ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்பவருக்குத்   தெரியும் ,

'தகுதியான விருதுகள்  மாணவர்களாலேயே வழங்கப்படுகின்றன'.

Tuesday 14 August 2012

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!


டுத்தடுத்து இரு நாட்கள்.சுதந்திர தின கொண்டாட்டங்கள்.வெளியேறிவிட்டான் வெள்ளையன்.
நம் நாடு நம் கைகளில்.
அனைத்து வித அடிமைத்தளைகள்,ஊழல்கள் எல்லாமிருந்தும்
நாம் முன்னேறியிருக்கிறோம்.
 
ஆனால்,இந்த நாட்கள் எல்லைக்கோட்டின் அருகிலும் தள்ளியும் வாழப் பிரிந்த இலட்சக் கணக்கான
மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்குமா?
நம் எல்லோரின் மனதிலும் எதிரி நாடு பாகிஸ்தான்.
அங்கு நாம்.
ஒரு குடும்பத்தின் சொத்துத் தகராறு தானே பிரிவினை.
தம்  உடன்பிறந்த  சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பவர் எத்தனை பேர்?
நாட்டுப்பிரிவினையின்  போது பிரிந்த
குடும்பங்கள்,சிதைந்த உறவுகள்  எத்தனை, எத்தனை?
 
போர் ஏதுமின்றி லட்சக்கணக்கானோர்  கொடூரமாகக்  கொல்லப்பட்ட உலக நிகழ்வு இந்திய பாகிஸ்தான் பிரிவினை.

இன்றைய மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைப்போம்.
நம் பிள்ளைகளுக்காவது நாட்டுப் பிரிவினையின் அவல நினைவுகளை
பாரபட்சமின்றி எடுத்துக் கூறி சகிப்புத்தன்மை வளர்ப்போம்.

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!

சுதந்திரமா சுதந்திரம் .........


வருடம்தோறும் வருகிறது சுதந்திர தினம்.
சுதந்திரத்திற்கான  மகிழ்ச்சி விடுமுறையால்.
வழக்கம்  போல் ஏதாவது தொலைக்கட்சியில் சுதந்திரம் என்றால் என்ன? என்று சிக்கியவர்களிடம் கேட்பார்கள்.அவர்களும் கேணத்தனமான பதிலை சிரித்துக்கொண்டே சொல்வார்கள்.
சிறப்புப் பேட்டிகளில் 'தல'களும் தளபதிகளும் சுதந்திரம் பெற்ற வீர வரலாற்றைக் கூறுவார்கள்.
சிறு வயதுமுதல் சுதந்திரத்தை கொண்டாடிய விதத்தை நமீதாக்கள் குழற நாமும் வாய் குழைந்து ரசிக்கலாம்.
சிறப்பு  திரைப்படங்களை பேரண்டத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாகப்  பார்க்கலாம்.
மதிய உணவிற்குப்பின் படுத்துத் தூங்கலாம்.
மான்களும் மயில்களும் சுதந்திரமாக குத்தாட்டம் போடுவதை கண்டு குடும்ப கெமிஸ்ட்ரியுடன் குதூகலிக்கலாம்.
சுதந்திரம் யாருக்கு? என்று மாமியார் - மருமகள், பெற்றோர் - பிள்ளைகள், குடிப்பவர் - குடிக்காதோர் என்று  சமுதாயத்தின் இரு முக்கிய பிரிவினர் நீயா நானா என வாய் வாதம் செய்வதுடன்  நாமும்  வாதம் செய்யலாம்.

பாவம் ஆசிரியர்கள் அனைத்து  முக்கிய நிகழ்வுகளையும் சிறிது தியாகம் செய்துவிட்டு பள்ளிக்கு கொடியேற்றும் நிகழ்விற்காகச் செல்லவேண்டும்.மகிழ்ச்சியாக ஆறாம் வகுப்பு மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் மற்ற சிலரும் வருவார்கள்.இப்போதெல்லாம்  பசையுடன் கொடி இருக்கிறது.சட்டையில் ஒட்டிக்கொள்வது சுலபம்  என்றாலும் கறை படிந்துவிடும்,போகாது.நெஞ்சில் குத்திவிடாமல் குண்டூசியால் குத்திக்கொள்வதே  நல்லது.

இவ்வாறான முன்னேற்றங்கள் எதையும் அறியாமல் மிச்சமிருக்கும் ஒரு சில வயதானவர்கள் காந்தி குல்லாவுடன் நேதாஜி சிலை முன் குரலில் மட்டும் நடுக்கத்துடன்  'வந்தே மாதரம்' என்று கர்ஜிப்பார்கள்.
அவர்களின் உள்ளங்களில் மறைந்திருக்கும், அவர்கள் பெற்ற  நம் நாட்டின்  எதிர்காலம்.

Monday 13 August 2012

என் வகுப்பில் நான்

           6,7,8 வகுப்புகள் எடுக்கும் அனைத்து  ஆசிரியர்களும் கண்டிப்பாக SSA  சார்பாக நடத்தப்படும் மாதாந்திரக் கருத்தாய்வுக் கூட்டத்தில் பங்குபெறவேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தியதால் எங்கள் பள்ளியிலிருந்து ஏற்கனவே சென்றுகொண்டிருந்த நால்வருடன் புதிதாக நான்கு ஆசிரியர்கள் சென்றிருந்தோம். இதுவே எனக்கு முதல் பயிற்சி.
ஏறத்தாழ 70 ஆசிரியர்கள்.18 பேரைத்தவிர அனைவரும் பெண்கள்.
          பொதுவாக மாநிலமெங்கும் CCE முறையில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும் பற்றிய விவாதமே அன்றைய பயிற்சி.  மூன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் .
எப்போதாவது பேசுவார் ஒருவர்.சத்தம் அதிகமாகும்போது அமர்ந்துவிடுவார்,
மற்றொருவர் ," Teachers....Please..LISTEN ...கவனமா கேளுங்க...officers visit  வருவாங்க....Please ..."என்று கூவிக்கொண்டே இருப்பார்.
மூன்றாவது ஆசிரியர் பயிற்றுநர்,
ஒவ்வொரு கேள்வி,பதிலையும்   வாசிக்கும்போதும் , அது குறித்த கருத்துக்கள்,அருகில் இருப்போருடனான பேச்சு என வகுப்பில் சலசலப்பு  அதிகரித்தால் , சிரித்தபடி
 'Teachers.....Masters... கவனிங்க.நீங்களா பேச ஆரமிச்சிடுவீங்களே..."
என்று  சமாளித்து தொடர்வார்.ஆண் ஆசிரியர்கள் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தோம்.எல்லாவற்றையும் சமாளித்தார்.

  இடைவேளை நேரத்தில் ,
'வகுப்பு நல்லா போகுதே...பரவாயில்ல,போரடிக்காம இருக்கு.என்ன இன்னும் ஆழமா விவாதிக்கணும்.நம்மோட கருத்துக்கள அதிகமா கேக்க மாட்டேங்கறாங்க"
என்று சக ஆசிரியர் கூறியது சரி எனப்பட்டது.
வீட்டிற்கு வந்தபின் அன்றைய வகுப்பு பற்றி  யோசித்தேன்.சில குறைபாடுகள் இருந்தாலும் முழு நாளும் வகுப்பும் சுவாரசியமாக நடத்திச்செல்லப்பட்டதற்கு என்ன காரணம்? பயிற்றுநருக்கும் ஆசிரியர்களுக்குமிடையே கருத்து பரிமாற்றம் நன்றாக இருந்தது.சத்தம் அதிகமாகும்போதேல்லாம் சிரித்தபடியே சமாளிக்கப்பட்டது.ஒரு நாள் முழுவதும் ஒரே தலைப்பு சார்ந்து ஒரு வகுப்பை கலகப்பாக நடத்த முடிகிறது.மகிழ்ச்சி.

அப்படியே நம் வகுப்பறைக்கு வருவோம்.

"ஏய்,அமைதியா இரு.ஏன் இப்படி கத்துறிங்க?அப்படியே கழுத்த   திருகி கொன்னுடுவேன் ',
வெளிய போடா...பாடம் நடத்தும்போது கவனிக்காம விதண்டாவாதமா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்க....நாயி..."
இது போல் பலவும்.வகுப்பறையில் சத்தம் அதிகமானால் நமக்கு வெறி பிடித்து விடுகிறது.

"உங்கள் வகுப்பு   ஒரே சத்தமா இருக்கு ,கொஞ்சம் அமைதியா பாத்துக்கோங்க,பசங்கள கண்ட்ரோலா வச்சிக்கணும்."
என்று மென்மையாகவும் சில சமயங்களில் கடினமாகவும் தலைமை ஆசிரியரிடமிருந்து வார்த்தைகள் வரும் போது நம் மனம் சுருங்கிவிடுகிறது.


என்ன இருந்தாலும் நம் வகுப்பறையில் நாமே ராஜா.
அத்துணை ஆசிரியர்களை அவ்வளவு நேரமும் எப்படி ஒரு ஆசிரியர் பயிற்றுநரால்  சமாளிக்க முடிகிறது?
என்ற கேள்வியின் விடையிலேயே என்  வகுப்பில் 45 நிமிடங்களை எப்படி இனிமையாக்கலாம்?என்பதன் பதிலும் இருக்கிறது.


உரை வளர்த்த தமிழர்


சென்ற ஆண்டு தமிழாசிரியர்களுக்கான பயிற்சியில் ஒரு மூத்த தமிழ் கூறினார்,
'இரண்டாம் தாளில் கவிதை எழுது என்று ஒரு கேள்வி வருது.நட்பு,மழை, அப்படின்னு கேக்கறாங்க.
கோனார் உரைல இந்த எல்லா தலைப்புலயும் ஈசியா போட்டிருக்காங்க.பசங்கள வாங்கி படிக்க சொல்லுங்க.நல்ல மார்க் எடுக்கலாம்.'

எனக்கு கடுமையான கோபம் வந்தது. மொழிப்பாடம் வெறும் மனப்பாடமா?
 என் முதல் வகுப்பிலேயே மாணவர்களிடம் கூறுவேன்,
'யாரிடமாவது தமிழ் உரை ஏதாவது பார்த்தேன்னா அப்பவே வாங்கி கிழித்துப் போட்டிருவேன்'.
புத்தகத்தை விட  பெரியதாகவும் விலை அதிகமாகவுமே உரைகள் விற்கப்படுகின்றன.ஆசிரியர்களே உரை எழுதுகிறார்கள்.
கடினமான நடை.சாணித் தாள்.சிறிய எழுத்துக்கள். இருந்தாலென்ன? உரை வாங்கிப் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்பது  பொது நம்பிக்கை.பல ஆசிரியர்களே உரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.
சமச்சீர் கல்வியில் தமிழ் புத்தகங்களில் செய்யுள் பாடம் உரையுடனே அச்சிடப்பட்டுள்ளது.முப்பருவக் கல்வி முறையால் புத்தகம் மூன்றானது போலவே உரையும் மூன்றாகிவிட்டது.புரிதல்  இல்லாத மனப்பாடக்  கல்வியும் அதிக மதிப்பெண் பெறுவதே அறிவு ,அதிகப் பணம் தரும் வேலை என்ற கானல் நீர்களின் பின்னால் அலைகின்றனர் மக்கள்.
முப்பருவக் கல்விமுறையில் செயல்வழிக் கற்றல் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் சில ஆசிரியர்களை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது.மாணவர் கைகளில் கல்வி மாறும் காலம் வரும்.

வீடியோ மாரியம்மன்


இமையம் ஆசிரியராகப் பணி  செய்பவர். வட மாவட்டங்களின் வட்டார மொழி வழக்கில் தேர்ந்த எழுத்தாளர்.
இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வீடியோ மாரியம்மன்.11 சிறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.ஒவ்வொன்றும் நம் கிராமங்களின் வெவ்வேறு முகத்தைப் பதிவு செய்கின்றன..  கிராமங்களில் வாழும்,  அடித்தட்டு மக்களாக ஆக்கப்பட்ட விவசாயிகளே பெரும்பாலும் இவரின் கதாபாத்திரங்கள். நவீனம் சிதைக்கும் இந்தியாவின் முதுகெலும்பை வலியுடன் பதிவு செய்துள்ளார்.
இமையத்தின் கதை மாந்தர்கள் வயதானவர்கள்.வாழ்வை  நவீனம் சிதைக்கும் போது எதிர்த்தும் ,முடியாமலும் வேதனைப்படுபவர்கள். தங்கள் பிள்ளைகளாலேயே புறக்கணிக்கப்படுபவர்கள்.வருந்திச்  செத்துக்கொண்டிருக்கும் அந்த வயதான தலைமுறைக்கு அடுத்து வரும் நாம் என்னவாகப் போகிறோம்?
மனது பதைக்கிறது.
இதுதான் இமையத்தின் எழுத்துகளின் வெற்றி.

கோவில் திருவிழாவில் கூத்தின் இடத்தை வீடியோ படங்கள் பிடிப்பது எள்ளல் கலந்து வருத்தமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது,வீடியோ மாரியம்மன் கதையில்.ஊர் சாமியை விட வீடியோ படமே இளைய தலைமுறையின் தேவையாக இருக்கிறது.ஊடாட்டமாக வரும் சாதி மாறிய காதல் மனம் பதைக்க வைக்கிறது.
அதிகப் பணம் கிடைக்கிறது என்பதற்காக கம்பெனிக்காரனிடம் ஊரார் விளைநிலங்களை விற்கின்றனர்.கடைசிவரை விற்க மறுத்து மகனுடன் போராடிப்பார்க்கிறார் கிழவர்.நிலம் வாங்கியது,தன் தந்தையின் உழைப்பு,நிலம் சார்ந்திருக்கும் உறவுகள் என கிழவர் வருந்த நம் மனமும் பதைக்கிறது.நிலத்தைச் சுற்றியுள்ள அனைவரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டனர் என்பதை அறிந்த கிழவர்,துடிக்கிறார்.

நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும்,வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும்,
வெத நெல்லு,வெத தானியம்,வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு  பலதும் போவும்.படி,வள்ளம்,மரக்கா இருக்காது.குதிர் இருக்காது.மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது.
இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும் தான் இருப்பம்.நீயும் நானும் இருக்கிறதுக்குப் பேருதான் ஊடா?

என்று மகனிடம் கேட்டும் போது,இழந்தவை நம் மனதில் வந்துபோகின்றன.வீட்டுப் பெண்களும் மகனின் பக்கமே இருக்கின்றனர்.அதிகப் பணம் தரும் பொருட்களும் நகையுமே அவர்களின் ஆசை.  'உயிர் நாடி' நிலத்தின் பங்கையும் மூத்த தலைமுறையின் இயலாமையையும் ஒருங்கே பதிகிறது.

இமையத்தின்  கிராமம்  முகமூடிகள் இல்லாதது.மனிதர்களின் அன்பு,ஆசை, கோபம், சுயநலம், என அனைத்தும் ஊடாடும் உணர்வுத்தளம்.

நுகர்வு கலாச்சாரம் இன்றைய கிராம மனிதரிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.மனம் பாரமானாலும் மூத்தவர்களைப்போலவே ஏதும் செய்ய இயலாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம்.ஐவகை நிலங்களைப் பகுத்து வாழ்ந்த தமிழினம் அனைத்தையும் அழித்து நகரப் பாலைகளை உருவாக்கி வாழ்ந்து   வருகிறது.
மண்,மனிதர்,இயற்கை மற்றும் வாழ்க்கையுடனான தொப்புள் கொடி உறவுகளை அழித்துவிட்டு கான்கிரீட் காட்டிற்குள் குளிர்  சாதன வசதியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் இயற்கையை ரசிக்கிறோம்.

இமையத்தின் மனிதர்கள் இயற்கையை , வாழ்வை  நேசிப்பவர்கள். எளிமையானவர்கள். மனிதத்தின்  உயிர் நாடிகளான  அவர்கள்  அழிந்து கொண்டிருப்பது கவலை தந்தாலும் அவரின் கதைகளில் உலவும் சிறுவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும்  சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதே நம் மனதிற்கு நம்பிக்கையும்,தெம்பும் தருவதாக இருக்கிறது.
 இமையம் 

Sunday 12 August 2012

சாதி நமதொழிய வேறில்லை


பள்ளிகளில் சாதி இருக்கிறதா?
கேட்டவுடன் சிரிக்கவைக்கும் அபத்தமான கேள்வியாகத் தோன்றுகிறது.
பள்ளியில் சேர்ந்தது முதல் நேற்று வரை வருகைப்பதிவேடு,தேர்வு முடிவுகள், விலையில்லா செருப்பிற்காக அளவு எடுத்தது முடிய அனைத்து இடங்களிலும்  சாதிபிரிவு கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இட ஒதுக்கீடு ஏன்? என்பது அனைவராலும் மறக்கப்பட்டு கேலிக்கூத்தாகிவிட்டது.

ஒவ்வொரு சாதிக்கும் சங்கங்கள்,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லது அரசனாக இருந்திருந்தால் அவரே அச்சாதியின் அடையாளம்.  சாதித்தவர்கள் எல்லாம் சாதித் தலைவர்களாகிப் போனார்கள்.அவைகளின் வார்த்தைகள் மறக்கப் பட்டு சிலைகளே அடையாளங்களாகி நிரந்தரமாய் கம்பிக் கூண்டுக்குள் அடைபட்டு விட்டார்கள்.
சட்டைப் பையில்,பர்சில்,வீட்டில்- எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டனர்.என் சாதி! என மார்தட்டும் மனிதரில் எத்தனை பேருக்கு அவர் வாழ்க்கை வரலாறாவது தெரியும்?
அவர்கள் பிறந்த,நினைவு நாட்களில் பொது மக்களிடையே கலவர பயம் ஏற்படுத்தப்படுகிறது.

என் சாதியே உயர்ந்தது எனக் கூவும் சங்கங்கள் இட ஒதுக்கீட்டில் இறுதியையே விழைகின்றன.

பள்ளியில்....................?
சுவர்களில் ஆசிரியர்,நடிகர்,நண்பன்,எதிரி எனக் கிறுக்குவதுடன் சாதித் தலைவர்களின் பெயர்களும் இணைந்துள்ளது.
காமராசர் பிறந்த நாள் போட்டிகள் - நாடார் பள்ளிகள், வீரமா முனிக்கு கிறித்தவப் பள்ளி, இவை தவிர பள்ளிப் பெயரிலேயே சாதி.

ஆசிரியர்களிடையே அப்பட்டமாகவே சாதி.

 பெரியார் கூட அவர் பிறந்த சாதிக்கு அடையாளமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வகுப்பறைக்குள் மாற்றம் வருமென நம்புகிறேன்.
கானல் போல் தோன்றினாலும்
நம்பிக்கை தானே வாழ்க்கை.

வினோத ராட்சசன் - தேவதச்சன்


எளிமையான வாழ்வின் மின்னும் தருணங்களை படம் பிடிப்பவர் தேவதச்சன்.
கண்மூடித்திறக்கும் நேரத்தில் நிலவில் நிறுத்தி பூமியைக்காட்டும் ஆச்சரியம்.எளிய வார்த்தைகளுக்குள் தோன்றி விரியும்பிரமாண்டம்.ஜென் பௌத்தம் கூறுவதைப் போன்ற எளிய தருணங்களில் மனம் மென்மையாகும்போது திடீரெனக் கிடைக்கும் ஞானம்,அவர் கவிதைகள்.

மனம் இலேசாகக் கலங்கினாலும் தேவதச்சனை வாசிக்கத் தொடங்கிய  நொடியே தள்ளி நின்று என்னை நானே பார்த்துக்கொள்வேன்.வார்த்தைகள் மனதை சலவை செய்யும்,
அடித்துத் துவைத்தல்ல,அறியாமலே.
இன்று மீண்டும் வாசித்தது அவரின் ஹோம்ஸ் என்னும் காற்று  கவிதை தொகுப்பு .ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது வெளிகள் தரும் பரவசம் ,வாழ்வின் தரிசனம்.

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று

அதன்
குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான்.

வாசித்ததும் வாசல் திறந்து எண்ண வெளிகளில் பறக்கத்தொடங்கும் மனம்.
 மைனாவாகவும் நீராகவும்.

ஒரு தட்டைக்
கீழே போட்டுவிடாதே
அதன்
 ஓசை விரிவில்
தட்டு பிரம்மாண்டமாகிவிடும்.

 
வார்த்தைகளால் நினைவில் விழுந்த தட்டின் ஓசை மனம் தாண்டி அண்டமெங்கும் விரிந்து செல்கிறது.
ஒவ்வொரு கவிதையும் அதற்கான தனித்த வெளியில் என்னை அலைக்கிறது.
ஒரு கவிதையின் வெளியிலிருந்து மீண்டு அடுத்ததை வாசிக்கத் தொடங்க ஆகும் இடைவெளியில் வெளிச்சமாகிறது வாழ்க்கை.

பள்ளிக்குத் திரும்புகையில்
ஆசிரியர்கள் அவர்களை அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரியாமல்
ஆசிரியர்களை அவர்கள் அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரிந்து.


பள்ளி சென்ற எல்லோருமே வியந்த  தருணம்.வாசித்ததும் நினைவில் ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்,என்னிடம் வார்த்தைகள் அற்றுப் போகச் செய்துவிடுகின்றன.

தேவதச்சனின் வார்த்தைகள்  அண்ட வெளியில் அழைத்துச் செல்லும் தூரத்திலிருந்து மீண்டு வந்து என் முகம் அணியும் வரையான இடைவெளியே  நான்.
தேவதச்சன் 

Friday 10 August 2012

அசடன்-அசடி

அப்பாடி என்றிருக்கிறது.
பல தடைகளைத்தாண்டி ஒருவழியாக தஸ்தாவெஸ்கியின் அசடனைப் படித்துவிட்டேன்.
கரமசோவ் சகோதரர்கள்,குற்றமும் தண்டனையும் -போலவே தஸ்தாவெஸ்கி அசாதாரணமாக மனித மன  வெளிகளை துல்லியமாக படம் பிடிக்கிறார்.பெரும்பாலும் ஆணின் மன ஓட்டங்களையே பதிவு செய்பவராக இருந்தாலும் அசடனில் பெண்களின் மனதையும்  அற்புதமாக வரைந்துள்ளார்.

மிஷ்கின், அற்புதமான பாத்திரப் படைப்பு.நல்லவன் இப்படித்தான் இருப்பான்.என்றெல்லாம் பல்வேறு விமரிசனங்களில் படித்திருக்கிறேன்.அதே எண்ணத்துடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அப்படித் தோன்றவில்லை.மிஷ்கினை விட என் மனதை நிறைத்தது தஸ்தாவெஸ்கியின் பெண்களே.அவர்களே ஆண்களின் அச்சாணிகள்.ஆணின் மையப்புள்ளி பெண்ணாகவும் பெண்ணின் மையப்புள்ளி ஆணாகவும் வாழ்க்கை பயணிக்கிறது.
அசடனில் உலவும் பெண்கள் அனைவருமே பல்வேறு மனப்போராட்டங்களுடனும் சரியாகவும் குழப்பமாகவும் முடிவெடுப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

என்னைக் கவர்ந்தவள்  நஸ்தாஷியா பிலிப்போவ்னா  .அவள் அற்புதமான உணர்வுகளுடைய மனுஷி.பல்வேறு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிய அவள் வாழ்வின் வசந்தமாய் வருகிறான் மிஷ்கின்.இருவரின் காதல் வார்த்தைகளில் சிக்காத உணர்வுப்பிரவாகம்.மிஷ்கின் மீது கொண்ட உண்மைக்  காதலே அவளை விலகி ஓடவைக்கிறது.ரோகோஷினை திருமணம் செய்ய முடிவும் தப்பித்தலுமாக அலைக்கழிக்கிறது.நாவலின் உயிர் மூச்சாக, தென்றலும் சூறாவளியுமாக நடத்திச் செல்கிறாள் நஸ்தாஷியா பிலிப்போவ்னா .

மிஷ்கின், அசடன்.சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் மனதில் எண்ணியதை அப்படியே வெளிப்படுத்துவதால் அசடன். கொஞ்சம் கொஞ்சமாக நானும்  அவனாகவே ஆகிவிட்டேன்.ஆணை இயக்கும் சக்தியாக இருக்கிறாள் பெண்.ஆகிய இருவரையும் காதலிக்கிறேன் என்று சொன்ன நிமிடத்திலேயே அற்புதமான,முழுமைபெற்ற மனிதனாக எனக்குத் தோன்றினான் மிஷ்கின்.
நம் உள்ளத்து உணர்வுகளை அதே தளத்தில் நம்மைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள இயலாது.நம்மை சரியாகப் புரிந்து  கொள்பவரைத் தேடியலையும் மனம் இறுதியில்  தனக்குத் தானே  பேசி,சிரித்து,அழுது, இருமையாகும் போதே அசடாகிறோம்.தொடங்கிய இடத்தில் முடிந்துபோன முழுமை மிஷ்கின்.

அக்லேயா இவானோவா ,துடுக்குப்பெண்ணாக வளம் வருபவள்.இளம் வயது தேவதை.இளம் பருவத்திற்கே உரிய தாவல்களை உடையவள்.யாரைத் திருமணம் செய்வது என பல எண்ணங்களிடையே மிஷ்கினையும் தொலைத்தவள்.

மரண தண்டனை பெற்றவனின் கடைசி எண்ணங்கள்,பல்வேறு ஆண்,பெண்களின்  அக உணர்வுகள் என மனித வாழ்வின் ரகசியங்களிடையே நம்மைக் கைபிடித்து   அழைத்துச் செல்கிறார் தஸ்தாவெஸ்கி.

மனம் மகிழ்ச்சியையே பெற விரும்புகிறது,ஆனால் துக்கத்திலேயே மகிழ்கிறது.மகிழ்ச்சியை விட துக்கத்தையே பிறரிடம் பகிர்ந்துகொள்கிறோம் உருவாக்கியும், உண்மையாகவும்.
தஸ்தாவெஸ்கியின் எழுத்துக் கண்ணாடி நம் முகமும் காட்டுகிறது.அதுவே மனிதத்தின் முகமும்.


Sunday 5 August 2012

கேள்வி விடைகள் 2

மரணம் தழுவிய உடல்
மலரைப்போல மிதக்கிறது.
அதன் ஒவ்வொரு அணுவிலும்
வாழ்க்கை ததும்பி வழிகிறது.
அருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான்
மரணதேவன்.
மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்
வாழ்வின் ரகசியங்களை.
அவன் மொழி புரியாமல்
ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
நான் அவனை.
அவன் என்னை.
புரியவில்லை என்றேன் மெதுவாக.
உணர் என்றான் புன்னகையுடன்.
புரிந்தது போலும்
புரியாதது போலும் இருக்கிறது
வாழ்க்கை.

Saturday 4 August 2012

கேள்வி விடைகள்.

நசிகேதா! 
மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல்  கேட்டுக்கொள்.சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன்.வாத்தியக் கலைஞர்களை தருகிறேன்.ஆண்களை மயக்குகிற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன்.இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள்.
ஆனால்... 
மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே! 
                                                                                                                - கட உபநிடதம் 
                                               மரணத்தைப் பற்றிய சிந்தனைகளும் தத்துவங்களும் யாரேனும் தெரிந்தவர்களின் மரணத்தின் போதே தோன்றி விவாதிக்கப்பட்டு மறக்கப் படுகின்றன.
ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போதும் மரணச் செய்திகளையே முதலில் படிக்கிறேன்.அஞ்சலிகளில் வரும் நிழற்படங்களை உற்று நோக்கி அவர்களின் பிறப்பு, இறப்பு தேதிகளைப் பார்த்து வயதையும் கணக்கிடுகிறேன்.
வயதானவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.குறைந்த வயதுடையவர்களின் மரணம், ஏன்? எப்படி? என்று கேள்விகளையும் மரணம் பற்றிய விடையிலா எண்ணங்களையும் நினைவில் சுழல விடுகிறது.
பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுவதாக நம்புகிறேன்.வாழ்க்கைப் பயணமே மரணத்தை நோக்கியதுதானே!
இடையில் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்,எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,பணத்திற்கான படிப்பு, வேலை,திருமணம்,வம்சம்  வளர்க்க பிள்ளைகள்,அவர்களின் மேல் திணிக்க கனவுகள்.
ஏன் பிறந்தேன்? என்பதைவிட எதற்கு பிறந்தேன்?என்ன செய்கிறேன்? செய்யப்போகிறேன்? என்ற கேள்விகளே  மனதைப் பிசைகின்றன.
ஓடி  ஓடி,தேடித் தேடி - எதை? எதற்காக?.
நிகழில் வாழச் சொல்கிறான் புத்தன்.
எது நிகழ்? வரும் நொடி -எதிர்காலம்.உடனேயே அது இறந்த காலமாக ஆகிவிடுகிறது.
இடையில் இருந்தும் இல்லாமலிருக்கிறது நிகழ்.
நிலையாமை,மாயை என்னென்னவோ சொல்லப்பட்டாலும் நிலையானதில் நிலையில்லாதது நிலைத்திருப்பதாகவே தோன்றுகிறது.
தேடல்கள் விடையை நோக்கி நகர்த்துவதாகத் தோன்றினாலும் வட்டமாய் ,தொடங்கிய இடத்திலேயே முடிவும் விடை ஏதுமின்றி.
என்னமோ இருக்கிறது. தேடலே புதிய கதவுகளை உருவாகித் திறக்கவும் முயல்கிறது.எப்போதும்போல் கணியன் பூங்குன்றனின் பாடலைப் படித்துக்கொள்கிறேன்.
அதுவே   கேள்வி போலவும் விடை போலவும் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

முத்துக் காதணிப் பெண்



Girl with a Pearl Earring
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு (Dutch) ஓவியர் வெர்மீர்.(1632 - 1675)  இவரது ஓவியங்கள் பெரும்பாலும்  வீட்டின் உட்புறக் காட்சிகளையே சித்தரிப்பவை.பெரும்பாலும் அவரது ஓவிய அறையையே வரைந்திருக்கிறார். அக்கால நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வக்கத்தினரையும் பணிப்பெண்களையும் 
அவரது ஓவியங்கள் காட்டுகின்றன.மிகத்தெளிவாக இல்லாவிட்டாலும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் 
மூலம் அவரைப்பற்றி அறியமுடியும்.
                தம் வாழ்நாளில் ஏறத்தாழ 66 படங்கள் வரைந்திருந்தாலும் 34 ஓவியங்களே தற்போது காணக் கிடைக்கின்றன.மிகச்சிறப்பான பார்வைப்புலம்,வண்ணக்கலவை,அலங்காரப் பொருட்கள்
 ஆகியன இவரது ஓவியங்களின் தனிச்சிறப்பு.
camera obscura  என்ற கருவியைப் பயன்படுத்தியதாலேயே இவரது 
ஓவியங்களில் perspective மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று கூறுவர்.
               வெர்மீருக்கு 14 குழந்தைகள் பிறந்தன.பிறந்த சில நாட்களிலேயே இறந்த 4 தவிர பத்து குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் அக்காலத்தில் நாடெங்கும் ஏற்பட்ட பண நெருக்கடியால் வருந்தி தனது 43  ஆவது வயதிலேயே இறந்தார்.
               வெர்மீரின் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று Girl with a Pearl Earring. இதை வரைந்த நிகழ்வு  குறித்த டிரேசி  செவாலியே  வின்   புகழ் பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பெற்ற  திரைப்படம் Girl with a Pearl Earring.
              வெர்மீர் வசிக்கும் சிறு நகரம் டெல்ப். அவரது வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு வருகிறாள் கிரிட்.   மூத்த பணிப்பெண் கிரிட்டிற்கு வீடு முழுவதையும் சுற்றிக்காட்டுகிறாள்.வெர்மீரின்அறையைக் காட்டி
 " இது எஜமானரின் அறை.இதையும் நீ சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் அனுமதியில்லாமல் உள்ளே செல்லக் கூடாது" என்கிறாள்.
மறுநாள் காலை எசமானியுடன் ஓவியரின் அறைக்குள் சென்று
 சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.அப்போது வரைந்து கொண்டிருக்கும் ஓவியமும் அதற்கான மாதிரி அமைப்பும் அவளை மிகவும் கவருகின்றன.
                ஓவியரின் ஆறாவது குழந்தை பிறப்பையும் புதிதாக வரைந்து முடித்த ஓவியத்தை, வரையப் பணித்த பணக்காரரான வான் ரைவனிடம் ஒப்படைப்பதையும் விருந்தாகக்  கொண்டாட ஏற்பாடு செய்கிறார் ஓவியரின் மாமியார். 
                          
                  விருந்தின்போது தமது அடுத்த ஓவியத்தை வேறு  ஒரு 
ஓவியரிடம் வரையவிருப்பதாக அறிவிக்கிறார் வான் ரைவன்.
அவர் வாங்குவதை நம்பியே வெர்மீரின்  குடும்பம் உள்ளது.
                  மறுநாள் ஒவியரின் அறையைச் சுத்தம் செய்யச் செல்லும் முன் எஜமானியிடம் கேட்கிறாள் கிரிட் ,
     ஜன்னல்களை சுத்தம் செய்யட்டுமா?
     செய்.ஒவ்வொன்றையும் என்னிடம் கேட்கத் தேவையில்லை.
    இல்லை...ஜன்னலை சுத்தம் செய்தால் அறையின் ஒளியமைப்பு மாறும்.
    அதனாலென்ன? பரவாயில்லை.செய்.
                   இந்த சிறு உரையாடலே கிரிட்டின் ஓவிய ஆர்வத்தையும் 
ஓவியரின் மனைவியின் மெத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை ஆக்கிரமிக்கத்தொடங்குகிறாள் கிரிட்,நமது மனதையும்.


                   அறையைச் சுத்தம் செய்யும்போது புதிய ஒரு பெட்டி 
இருப்பதைப்  பார்க்கிறாள் கிரிட்.அங்குவந்த ஓவியர் அவளிடம் இது ஓர் ஒளிப்படக்  கருவி  என்றும் அதைப் பயன்படுத்துவதையும் காட்டுகிறார்.அது எதிரே உள்ள காட்சியை பிரதிபலிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். மெதுவாக ஓவியருடன் பழகத் தொடங்குகிறாள்.வண்ணங்களைப்பற்றி எடுத்துக் கூறுகிறார் வெர்மீர்.நம்மைச் சுற்றியுள்ளவற்றை எப்படிப் பார்க்க வேண்டுமென அறிந்து கொள்கிறாள்.
                  கிரிட் , மாமிசம் வாங்கச் செல்லும்போது அங்கு வேலை பார்க்கும் இளைஞனுடன் நட்பு மலர்கிறது.
பணிப்பெண் என்ற புதிய ஓவியத்தை வரையத்தொடங்குகிறார் வெர்மீர்.வண்ணங்களை அரைப்பதில் உதவியாக இருக்கிறாள் கிரிட்.
                 புதிய ஓவியம் வரைய ஒப்பந்தம் பெரும் ஆசையில் 
ஓவியரின் மாமியார் மீண்டும் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.உங்களுடைய குடும்பத்துடன் விருந்து மேசையில் இருக்கும் காட்சியை பெரிய ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என வான் ரைவனிடம் ஆசை காட்டுகிறாள்.விருந்தில் கிரிட்டைப் பார்த்து ஆசை கொண்ட ரைவன்,
  " விருந்துக்காட்சி வரையலாம்.ஆனால் என் அருகில் கிரிட் இருக்குமாறு வரைந்தால் மட்டுமே வாங்கிக்கொள்வேன்."
என்கிறான்.ஓவியர் அதன் உட்பொருளை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
                 மறுநாள் மாமிசம் வாங்கச் செல்லும் கிரிட்டை பார்த்து 
அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொள்ள,கடைக்காரர் மற்றும் தன் காதலன் மூலம் ,ரைவன் ஒரு பணிப்பெண்ணை வரைய சொன்னால்அவளை அடைந்துவிடுவான்  என்று அர்த்தம் என அறிகிறாள்.காதலன் எச்சரிக்கின்றான்.
                கிரிட்,வெர்மீரிடம் தன்னை வரைய வேண்டாம் என 
 கேட்டுக்கொள்கிறாள்.ஓவியரும் சம்மதிக்கிறார்.ஆனால் அவளைத் தனியாக ஒரு ஓவியம் வரைய விரும்புவதாகக் கூறுகிறார்.அவளும் சம்மதிக்கிறாள்.தன் மனைவியின் முத்துக் காதணியை அணிந்துகொண்டால் நன்றாக  இருக்குமென ஓவியர் கூற தனக்கு காதில் துளை இல்லையென மறுத்துவிடுகிறாள் கிரிட்.
                வான் ரைவன் கிரிட்டைக் கற்பழிக்க முயல்கிறான்.
வாழ்க்கை பயத்துடனே கழிகிறது. 
கிரிட் காதணி அணிய மறுத்ததால் இரண்டு ஓவியங்களும் 
முடிக்கப்படாமல் இருக்கின்றன.இதனை  அறிந்த ஓவியரின் மாமியார் தனது மகள் வீட்டில் இல்லாத நாளில் அவளது முத்துக் காதணிகளை எடுத்து வந்து கிரிட்டிடம் கொடுத்து,
 இதை அணிந்துகொள்.உன்னால் தான் ஓவியங்களை முடிக்க வைக்க முடியும்.என் மகள் வீட்டில் இல்லை.-என்கிறாள். 
தானே கிரிட்டின் காதில் துளையிட்டு முத்துக் காதணியை அணிவித்து ஓவியத்தை வரைந்து முடிக்கிறான் வெர்மீர்.கிரிட்டின்  காதில் வெர்மீர் துளையிடும் காட்சி பாரதிராஜாவின் நாடோடித் தென்றலை நினைவு படுத்துகிறது.

           ஆரம்பம் முதலே கிரிட்டிற்கு ஓவியரின்  பிள்ளைகளுடனான உறவு சுமுகமாக இல்லை.ஓவியரின் மகள் மூலம் நடந்ததை அறிகிறாள் ஓவியரின் மனைவி.அவளுக்கு,கிரிட்டுடன் ஓவியர் பழகுவது பிடிக்கவில்லை.என் முத்துக்காதணியை இவள் எப்படி அணியலாம் என சண்டையிடுகிறாள்.அந்த ஓவியத்தைப் பார்க்க விரும்புகிறாள்.ஓவியர் காட்ட மறுக்கிறார். விவாதங்களுக்குப்பிறகு ஓவியத்தைக் காட்டுகிறார். கோபத்துடன் அதைக் கிழிக்கச் செல்லும் மனைவியைத் 
தடுக்கிறார்.கோபத்தில் "வீட்டை விட்டுப் போ " என கிரிட்டிடம் கத்துகிறாள்.ஓவியர் ஏதும் சொல்லாமலிருக்க அங்கிருந்து வெளியேறி காதலனுடன்வசிக்கத்தொடாங்குகிறாள் கிரிட்.
                 சிலநாட்கள் கழித்து ஓவியரின் மூத்த பணிப்பெண் கிரிட்டின் வீட்டிற்கு வந்து ஒரு துணி மடிப்பைக் கொடுக்கிறாள்.பிரித்துப் பார்க்கிறாள் கிரிட்.அதனுள் அவளை   வரைந்தபோது அவள் தலையில்  அணிந்திருந்த நீல வண்ணத் துணியுள் இருந்தன முத்துத் தோடுகள்.
               கடைசிக்காட்சியில் நடைபெறும் மனைவியுடனான 
வாக்குவாதத்தின் போது ஓவியம் நமக்குத் தனியாகக் காட்டப்படாமல் கிரிட் கையிலிருக்கும் காதணிகள்   ஓவியத்தின் காதணியாகமாறி அதிலிருந்து camera வெளியேறி அந்த அற்புதமான ஓவியம் நம் மனமெங்கும் நிறைவதோடு 
படம் முடிகிறது.
              17 ஆம் நூற்றாண்டின் டெல்ப் நகரம்,வெர்மீரின்  அறை ஆகியன  நம் கண்முன்னே அப்படியே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் உடை அலங்காரங்களும் ஓவியம் போன்ற காட்சி  அமைப்புகளும் தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமைக்குச் சான்று.
         கிரிட்,   ஓவியருடன் நெருக்கமாகப் பழகும்போது தன் உடலில் எழும் உணர்வுகளை காதலன் மூலமாகவே தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை.
              கலைஞர்களின் வாழ்க்கையும் படைப்பிற்கான தேடல்களும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
Directed by
Peter Webber
Produced by Andy Paterson
Anand Tucker
Screenplay by Olivia Hetreed
Based on Girl with a Pearl Earring by
Tracy Chevalier
Starring Colin Firth
Tom Wilkinson
Cillian Murphy

Judy Parfitt
Music by Alexandre Desplat
Cinematography Eduardo Serra
Editing by Kate Evans

விருதுகள் 

Wins


வெர்மீரின் ஓவியங்கள்